தாகா : வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ராபே மொர்டாசா வீட்டை கலவரக்காரர்கள் கொள்ளை அடித்து, தீ வைத்து எரித்தனர். வங்கதேசத்தில் தற்போது மாணவர்களால் துவங்கப்பட்ட மிகப்பெரிய கலவரம் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் இந்த கலவரத்தின் முடிவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தலைமறைவாகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
கலவரக்காரர்கள் ஷேக் ஹசீனா வீட்டை சூறையாடினார்கள். அங்கு இருந்த பொருட்கள் பலவற்றை கொள்ளை அடித்து சென்றனர். அடுத்து ஷேக் ஹசீனாவால் நடத்தப்பட்டு வரும். வங்கதேச ஆளுங்கட்சியான ஆவாமி லீக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஷ்ராபே மொர்டாசாவின் வீட்டையும் கலவரக்காரர்கள் சூறையாடினார்கள். அவரது வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்ற அவர்கள், இறுதியாக வீட்டுக்கு தீ வைத்து எரித்தனர்.

இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என் கூறப்படுகிறது. அவரது வீட்டில் இருந்த அனைவரும் ஏற்கனவே தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. மஷ்ராபே மொர்டாசா வங்கதேச கிரிக்கெட் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகள், 220 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 54 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் 2018ல் ஆவாமி லீக் கட்சியில் இணைந்தார்.
அவருக்கு எம்பி சீட்டு கொடுக்கப்பட்டது. தேர்தலில் வென்றவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில், ஆவாமி லீக் கட்சியின் முக்கிய தலைவராக கருதப்பட்ட அவரது வீட்டை கலவரக்காரர்கள் குறி வைத்து சூறையாடி இருக்கிறார்கள். அவர் கடந்த மாதம் மாணவர்கள் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும், அதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இறந்தது குறித்தும் அமைதி காத்து வந்ததால் அவரது வீட்டை சூறையாடியதாக கலவரக்காரர்கள் தெரிவித்தனர்.
தற்போது வங்கதேச நாட்டை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. விரைவில் தற்காலிக அரசை அமைக்க உள்ளதாகவும், பின்னர் தேர்தல் நடத்த உள்ளதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது. ஷேக் ஹசீனா இந்தியாவில் எங்கு இருக்கிறார் என்ற தகவல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்து இங்கிலாந்துக்கு சென்று தஞ்சம் அசைய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.