டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க, இந்திய முன்னாள், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் தலைமையிலான நால்வர் கமிட்டியை அமைத்துள்ளது, சுப்ரீம் கோர்ட்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், பி.சி.சி.ஐ. நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி அளித்த சிபாரிசுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை 18ந் தேதி உத்தரவிட்டது.

ஆனால் சில சிபாரிசுகளை மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்க மறுப்பதால் தங்களால் அமல்படுத்த முடியவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி வழங்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, பரிந்துரைகளை அமல்படுத்தாததால் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை நீக்க வேண்டும் என்று லோதா கமிட்டி சார்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. டிசம்பர் 3ம் தேதிக்குள் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கோர்ட்டு கெடு விதித்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எதுவும் எடுக்காமல் இழுத்தடித்தது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிர்வாகம் வெளிப்படை தன்மையுடையதாக இருக்க மத்திய தலைமை கணக்கு அதிகாரியின் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசு தலையீடுவது போல் ஆகும் என்று தலைவர் அனுராக் தாகூர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதி முட்டுக்கட்டை போட முயற்சித்தார்.
இதனிடையே கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காத இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டனர்.
லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்தும் விஷயம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியதை மறைத்து கோர்ட்டுக்கு பொய்யான தகவலை தெரிவித்த அனுராக் தாகூருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பினர்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க, இந்திய முன்னாள், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் தலைமையிலான நால்வர் கமிட்டியை அமைத்து உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். இந்த குழுவில் வலராற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டையானா எடுல்ஜி மற்றும் ஐடிஎப்சி அதிகாரி, விக்ரம் லிமாயே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அதேநேரம், விளையாட்டு துறை செயலாளரையும் நிர்வாகிகளில் ஒருவராக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்ததை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்பதாக வினோத் ராய் கூறியுள்ளார். எனவே பிசிசிஐ இனி புதிய நிர்வாகத்தின் கீழ் இயங்க உள்ளது உறுதியாகியுள்ளது. அதேபோல, ஆர்.எம்.லோதாவும், நீதிமன்ற நடவடிக்கையை வரவேற்றுள்ளார். தனது பரிந்துரைகளை புதிய நிர்வாகிகள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.