மும்பை: டெஸ்ட் போட்டிகளில் இதர அணிகள் தங்கள் தரத்தை உயர்த்துவது எப்போது என்று முன்னாள் கேப்டன் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே 100 ஆண்டுகளை தாண்டி நடைபெற்று வருகிறது. பாரம்பரியமிக்க இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது.

தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியின், முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய 251 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அதற்கு 2வது டெஸ்டில் பதிலடி கொடுக்க, இங்கிலாந்து கடும் சவால் தந்தது. ஒரு வழியாக தடுமாறிய ஆஸி. அந்த போட்டியை டிரா செய்து தப்பித்தது.
இரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி, வரும் 22ம் தேதி லீட்ஸில் துவங்குகிறது. இந்நிலையில், இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி ஒரு டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:
ஆஷஸ் தொடரால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் உயிருடன் உள்ளது. உலகின் மற்ற அணிகளுக்கு தரத்தை உயர்த்த வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.அதற்கு ஹர்பஜன் ஆமோதித்து பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: அணிகள் பலமாக இருந்தால்தான் விளையாட்டின் தரத்தை பராமரிக்க முடியும். ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சொல்லப்போனால் நியூசிலாந்து 4 அணிகள்தான் வலுவான அணிகளாக இருக்கின்றன என்றார்.