பந்து சேத விவகாரத்தை மறைத்தார்கள்
சில மாதங்கள் முன்பு ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தி அதை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பந்தை சேதப்படுத்த திட்டம்
தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் துவக்கத்தில் இருந்தே பல சர்ச்சைகள் நடந்தேறின. அவை அனைத்தும் ஒருவரை ஒருவர் சீண்டுவது, திட்டுவது, ரசிகர்கள், போட்டி அதிகாரிகள் கேலி செய்தது என சிறிய விஷயங்களாக இருந்தன. அதனால் வெறுப்பில் இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், குறிப்பாக மூத்த வீரரான டேவிட் வார்னர், மற்ற வீரர்களோடு சேர்ந்து பந்தை சேதப்படுத்தி போட்டியில் விக்கெட்களை வீழ்த்தலாம் என திட்டம் போட்டு அதை புதிய வீரரான பான்கிராப்ட்-ஐ வைத்து செயல்படுத்தியதாக கூறப்படுகிறது.
டிவியை அணைத்து விட்டேன்
இந்த விவகாரம் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது தான் பாதியில் டிவியை அணைத்து வைத்து விட்டதாக கூறி உள்ளார் அப்போதைய கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் ஜேம்ஸ் சதர்லாண்ட். தென்னாபிரிக்காவில் அந்த போட்டி நடைபெற்றது. சரியாக பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய காட்சி திரையில் காட்டப்பட்ட போது ஆஸ்திரேலியாவில் நடு இரவு. அதனால், அந்த நேரத்தில் டிவியை அணைத்து இருக்கிறார் ஜேம்ஸ். மேலும், அந்த நாள் முடிந்த உடன் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வீரர்கள் உண்மையை மறைத்து கொடுத்த பேட்டியையும் அவர் பார்க்கவில்லை.
பேட்டியில் முழு உண்மை இல்லை
அதன் காரணமாகவே, இந்த விவகாரம் மேலும் பெரிதாகிவிட்டது என கூறுகிறார் ஜேம்ஸ். தான் அந்த விவகாரம் நேரலையில் ஒளிபரப்பான போது முழுவதுமாக பார்த்து இருக்க வேண்டும். அதே போல, அந்த நாளின் முடிவில் அளிக்கப்பட்ட பேட்டியின் போதும் நான் தலையிட்டு இருக்க வேண்டும். அந்த பேட்டியில் முழு உண்மையைக் கூறாமல் விட்டது தான் இந்த விவகாரத்தில் வீரர்கள் தடை செய்யும் அளவுக்கு காரணம் எனவும் கூறினார் ஜேம்ஸ்.
17 ஆண்டுகள் தலைவராக இருந்தார்
சுமார் 17 ஆண்டுகள் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவராக இருந்த ஜேம்ஸ் சதர்லாண்ட், இந்த பந்து சேத விவகாரத்தை அடுத்து பதவியில் தொடராமல் விலகிச் செல்கிறார் என கூறப்படுகிறது. அடுத்த தலைவராக கெவின் ராபர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜேம்ஸ் சதர்லாண்ட்டுடன் இணைந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர் ஆவார்.