சி.எஸ்.கே அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்தாண்டு மோசமான ஆண்டாக அமைந்தது. புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை தள்ளப்பட்டு ப்ளே ஆஃப்-க்கு கூட அந்த அணியால் செல்ல முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு மீண்டு வர வேண்டும் என கேப்டன் தோனி உள்ளிட்டோர் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹோம் அட்வாண்டேஜ் இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.இதனால் அந்த அணி மும்பையில் தற்போது முகாமிட்டுள்ளது.
பிரச்னை
இந்நிலையில் சென்னை அணி சந்திக்கவிருக்கும் பிரச்னை குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சி.எஸ்.கே அணியில் முக்கிய பேட்ஸ்மேன்களான சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி சர்வதேச போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகள் எதிலுமே சமீப காலத்தில் ஆடவில்லை. ஜடேஜாவும் காயம் காரணமாக ஆடாமல் உள்ளார். எனவே பேட்டிங் வரிசையில் 7ல் 4 பேர் நேரடியாக ஐபிஎல்-க்கு களமிறங்குகின்றனர்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்
டாப் ஆர்டரில் நல்ல ஃபார்மில் உள்ள உத்தப்பா, ருத்ராஜ் கெயிக்வாட், டூப்ளசிஸ் போன்றோரை பயன்படுத்தலாம் ஆனால் மீதமுள்ள வீரர்களுக்கு என்ன செய்வார்கள். பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவது சென்னை அணிக்கு சவாலாக இருக்கும். மும்பை போன்ற ஆடுகளத்தில் முதலில் 180 போன்ற அதிக ரன்கள் அடிக்க வேண்டும். அதற்கு டாப் ஆர்டர் முதலே அடித்து ஆட வேண்டும். ஆனால் அது சென்னை அணிக்கு சிக்கலாக இருக்கலாம்.
அதிரடி வேண்டும்
ஜடேஜாவை டாப் ஆர்டரில் ஆட வைக்க முயற்சிக்க வேண்டும். அதே போல தோனியும் சிறப்பாக ஆட வேண்டும். நீண்ட நாட்களாக விளையாடாமல் உள்ள சுரேஷ் ரெய்னா, நன்றாக ஆடவில்லை என்றால் சென்னை அணிக்கு சிக்கல் தான். அதுவே சென்னை அணிக்கு மிகப்பெரும் பிரச்னையாக போகும். மும்பையில் நடைபெறும் 5 போட்டிகளில் சென்னை 3ல் வெற்றி பெற்றால் தேறிவிடும், இல்லையென்றால் திணறும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.