மும்பை: அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது சென்னை அணி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சிஎஸ்கே அணி சாதனை படைத்தது. இந்த இறுதிப்போட்டியுடன் சென்னை அணியின் நட்சத்திர வீரர் அம்பாதி ராயுடு, அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதையடுத்து சிஎஸ்கே வீரர்களும் பலரும் ராயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கடைசிப் போட்டியில் எமோஷனலான அம்பாதி ராயுடு ஆனந்த கண்ணீருடன் ரசிகர்களுக்கு விடை கொடுத்தார்.

இதையடுத்து அம்பாதி ராயுடு கிரிக்கெட் களத்திற்கு மீண்டும் வர மாட்டார் என்று ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. இதையடுத்து அம்பாதி ராயுடு தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசிய கருத்துகள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸால் சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கப் போகும் வீரர்களை அந்த அணி நிர்வாகம் ட்விட்டரில் அறிவித்தது.
அதில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய மிட்செல் சான்ட்னர், டெவோன் கான்வே ஆகியோர் மீண்டும் டெக்ஸால் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் மற்றும் ஜெரால்ட் கொயட்சே ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் டுவைன் பிராவோவும் வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து தான் டெக்ஸாஸ் அணி தரப்பில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியது. அதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அம்பாதி ராயுடு டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டது. இது சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தொடங்கவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் வரும் ஜூலை 14ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.