டெல்லி : இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக ஆடி உள்ள சேத்தன் சவுஹான் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 73. அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர் தற்போதைய உத்தர பிரதேச அரசில் கேபினட் அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்கள் முன் சேத்தன் சவுஹான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு லக்னோ பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயது மற்றும் ஏற்கனவே இருந்த உடல்நல பிரச்சனைகள் காரணமாக அவரது உடல்நிலை மோசமானது.
அவர் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், உறுப்புகள் செயலிழந்ததால் அவர் இன்று மரணம் அடைந்தார்.
அவரது மரணத்தை சகோதரர் புஷ்பேந்திர சவுஹான் உறுதி செய்தார். அவரது மகன் விநாயக் மெல்போர்ன் நகரில் விரைவில் வந்து விடுவார் என்றும், அவர் வந்த பின் இறுதி சடங்கு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
சேத்தன் சவுஹான் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2086 ரன்கள் குவித்துள்ளார். துவக்க வீரரான அவர் சுனில் கவாஸ்கருடன் சேர்ந்து 12 நூறு ரன் கூட்டணி அமைத்துள்ளார். 7 ஒருநாள் போட்டிகளிலும் ஆடி உள்ளார். ஓய்வுக்குப் பின் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பு மற்றும் அரசியலில் கவனம் செலுத்தி வந்தார்.
உத்தர பிரதேசம் அம்ரோஹா தொகுதியில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1981இல் அர்ஜுனா விருது வென்றார்.