சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், தனது ஆரம்பகால கிரிக்கெட் பயணத்தின் போது தான் சந்தித்த நிறவெறி கொடுமைகள் மற்றும் பொதுவெளியில் சந்தித்த அவமானங்கள் குறித்து மிகவும் உருக்கமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமிலேயே சக வீரர்களால் தான் எவ்வாறு மோசமாக கேலி செய்யப்பட்டேன் என்பதை அவர் வேதனையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த 1982-83 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது 17 வயதை எட்டிய லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இந்திய அணியில் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அப்போது அங்கு வந்த பெயர் குறிப்பிட விரும்பாத சக இந்திய வீரர் ஒருவர், "சரியான நிறத்தில் கேக் ஆர்டர் செய்துள்ளீர்கள். கருப்பு நிற பையனுக்கு ஏற்ற டார்க் சாக்லேட் கேக்" என்று உருவத்தை வைத்து கேலி செய்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவராமகிருஷ்ணன் கேக் வெட்ட மறுத்து அனைவர் முன்பும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். பின்னர் சுனில் கவாஸ்கர் அவரை சமாதானப்படுத்தி கண்ணீருடன் கேக் வெட்ட வைத்துள்ளார்.

அதேபோல, அவருக்கு 14 வயது இருக்கும் போது, மூத்த இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் அவரை மைதான ஊழியர் என நினைத்து தனது காலணிகளை சுத்தம் செய்யும்படி கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, தமிழ்நாடு அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் சக வீரர்களால் 'கருப்பா' என்றும், வட இந்தியாவில் விளையாடும் போது அங்குள்ள ரசிகர்களால் 'காலியா' என்றும் மிக மோசமாக உருவக்கேலி செய்யப்பட்டுள்ளார். ஒரு மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் தொடர் முழுவதும் ரசிகர்கள் அவரை இப்படியே தொடர்ந்து கேலி செய்துள்ளனர்.

மும்பையில் உள்ள நாரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, சிவராமகிருஷ்ணனின் தோற்றம் மற்றும் வயதைக் கண்ட காவலாளி, அவர் இந்திய அணி வீரர் என்பதை நம்ப மறுத்து அவரை உள்ளே அனுமதிக்காமல் வெளியே நிறுத்தியுள்ளார். சுமார் 1 மணி நேரம் கழித்து சக வீரர் ஒருவர் வந்த பிறகே அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு ஒவ்வொரு முறை அந்த கேட்டை கடக்கும் போதும் தன்னை மீண்டும் வெளியே துரத்தி விடுவார்களோ என்ற பயத்தில் தனது உடல் நடுங்கியபடியே இருக்கும் என்று சிவராமகிருஷ்ணன் தனது கசப்பான அனுபவங்களை மனவேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
