மும்பை: 2025 ஆசிய கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறிய காரணம் "சௌகரியமான சப்பைக்கட்டு" என முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கடுமையாகச் சாடியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2025ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், 604 ரன்களை 50.33 என்ற பேட்டிங் சராசரியிலும், 175.07 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டிலும் குவித்து, தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். இதனால், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அணி அறிவிக்கப்பட்டபோது, 15 பேர் கொண்ட முக்கிய அணியில் மட்டுமல்லாமல், 5 பேர் கொண்ட ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலும் கூட ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஜித் அகர்கர், "ஸ்ரேயாஸ் ஐயரைத் தேர்வு செய்யாதது அவரது தவறோ அல்லது எங்கள் தவறோ அல்ல. 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால், அவர் துரதிர்ஷ்டவசமாக வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
அகர்கரின் இந்தக் கருத்தை தனது யூடியூப் சேனலில் கடுமையாக விமர்சித்துள்ள பத்ரிநாத், "ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் இந்திய டி20 அணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர் துரதிர்ஷ்டசாலி என்று அகர்கர் கூறுவது, தப்பித்துக்கொள்வதற்கான ஒரு சௌகரியமான வழி. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரேயாஸ் சிறந்த செயல்பாட்டை கொண்டுள்ளார், கேப்டனாகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்," என்று குறிப்பிட்டார்.
மேலும், "ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக, 5-ம் இடத்திற்கு சிவம் துபே மற்றும் ரிங்கு சிங்கை தேர்வு செய்துள்ளனர். கடந்த ஓராண்டில், மோசமான ரெக்கார்டுடன்இருக்கும் அவர்கள் இருவரும் பெரிதாக எதையும் செய்யவில்லை. சுழற்பந்து வீச்சை அற்புதமாக எதிர்கொள்ளும் திறனும், சிறந்த ஃபினிஷிங் திறமையும் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணியின் 5-ம் இடத்திற்கு ஒரு கச்சிதமான தேர்வு. இது ஒரு 50-50 முடிவு கூட கிடையாது, நிச்சயம் ஸ்ரேயாஸ் ஐயர்தான் தேர்வாகியிருக்க வேண்டும்," என்று பத்ரிநாத் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
தனது விமர்சனத்தின் உச்சமாக, "விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இல்லாத நிலையில், ஸ்ரேயாஸின் அனுபவமும், தலைமைப் பண்பும் அணிக்கு மிகவும் தேவை. இது துரதிர்ஷ்டத்தை விட, தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தேர்வாகவே தெரிகிறது," என்று பத்ரிநாத் கூறியுள்ளார்.