கேப்டன் யார்?
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, இன்னும் ஃபுல் ஃபிட்னஸுடன் உள்ளார். அவர் எப்படியும் இன்னும் 8 - 9 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 3 வடிவ போட்டிகளையும் அவரால் தலைமை தாங்க முடியவில்லை என்றும், தனி தனியாக கேப்டன்கள் நியமிக்கப்பட வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களால் கோரப்பட்டு வருகிறது. இந்த கேள்வி தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.இந்நிலையில் இந்தியாவின் அடுத்த கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தான் சரியாக இருப்பார் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பேசப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் ஐபிஎல்-ல் அவர் டெல்லி அணியை வழிநடத்திய விதம் தான்.
இளம் வீரர்
டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், இந்தாண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை. இதனால் பண்ட் புதிய கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாகவே அணியை வழிநடத்தியுள்ளார். அதற்கு உதாரணம் இந்தாண்டு ஐபிஎல்-ல் டெல்லி அணிதான் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. தோனியின் சிஎஸ்கே, கோலியின் ஆர்சிபி அணிகள் 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளது.
சாபா கரீம்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சாபா கரீம், இந்திய அணியின் அடுத்த கேப்டன் பண்ட்-ஆ என்பது இப்போதே கேட்பது சரியல்ல என நினைக்கிறேன். அவருக்கு நல்ல திறமை உள்ளது. அவரின் கேப்டன்சி ஸ்டைல் உங்களை மகிழ்விக்கும் விதமாக இருக்கும். ஆட்டத்தில் அவர் இருந்தால் ஒரு புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்கிறார். தன்னுடன் மற்ற வீரர்களும் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும் என நினைக்கிறார். தோனியின் கேப்டன்சி குணங்கள் நிறையவற்றை நான் ரிஷப் பண்ட்-இடமும் பார்க்கிறேன். செயல்பாடு மற்றும் முடிவு எடுப்பது ஒரே மாதிரி உள்ளது.
அது மிக முக்கியம்
ஆனால் தற்போதைக்கு ரிஷப் பண்ட், 3 வடிவ போட்டிகளிலும் தனது இடத்தை உறுதி செய்துக்கொள்வதுதான் முக்கியம். ஏனென்றால் இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் உள்ளனர். அதன் பிறகு தான் ரிஷப் பண்ட் உள்ளார். எனவே அவர் தொடர்ந்து அணியில் உள்ளார். என்னைப் பொறுத்தவரை ரிஷப் பண்ட் டி20 போட்டிகளில் இன்னும் சில இடங்களில் கவனம் செலுத்த வேண்டும் என சாபா கரீம் கூறியுள்ளார்.