கொழும்பு: லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பெயரை பதிவு செய்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனியின் தளபதி போல் வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. இதனால் சென்னை அணி ரசிகர்கள் சுரேஷ் ரெய்னாவை சின்னதல என்று கொண்டாடினர். சென்னை மற்றும் குஜராத் அணிக்காக ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ள சுரேஷ் ரெய்னா 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 5,500க்கும் அதிக ரன்களை விளாசியவர்.

2020ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் போது திடீரென சென்னை அணி முகாமில் இருந்து சுரேஷ் ரெய்னா வெளியேறினார். இதனால் சென்னை அணி நிர்வாகிகளுக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருப்பினும் ஒரு சீசன் சென்னை அணிக்காக ஆடிய அவரை, பின்னர் நடந்த மெகா ஏலத்தில் எந்த அணியும் வாங்க முன் வரவில்லை. இதற்கு முன் தோனி ஓய்வை அறிவித்த அதே நாளில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரெய்னா அறிவித்தார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரை பின்பற்றி இலங்கையிலும் லங்கா பிரீமியர் லீக் தொடர் 3 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. 4வது ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூல்கை 31ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் எல்பிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் ஜூன் 14ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த 5 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா தனது பெயரை ஏலப் பட்டியலில் கொடுத்துள்ளார். 36 வயதாகும் சுரேஷ் ரெய்னாவுக்கு இலங்கை அணியில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் சுரேஷ் ரெய்னாவை ஒப்பந்தம் செய்ய அனைத்து அணிகளும் போட்டிப்போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஓய்வுக்கு பின் யுவராஜ் சிங், உன்முக் சந்த் உள்ளிட்டோர் யூஏஇ பிரீமியர் லீக், அமெரிக்கா பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் விளையாடினர். அதேபோல் ரெய்னாவும் எல்பிஎல் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.