“விடைபெறுகிறேன் நன்றி”.. 38 வயதில் முன்னாள் சிஎஸ்கே, இந்திய வீரர் கரன் சர்மா ஓய்வு அறிவிப்பு
மும்பை: இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான கரன் சர்மா சர்வதேச மற்றும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். 38 வயதான நிலையில், அவர் சனிக்கிழமை அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
உத்தர பிரதேச டி20 லீக் போட்டி ஒன்றில் விளையாடிய பிறகு தனது ஓய்வு முடிவை கரன் சர்மா அறிவித்தார். வரும் ஆகஸ்ட் 25 அன்று நடைபெறும் போட்டியே இவரது கடைசி ஆட்டமாக இருக்கும். இந்திய அணிக்காக இவர் 1 டெஸ்ட், 2 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடியுள்ளார். மேலும், ரயில்வேஸ், உத்தர பிரதேசம், ஆந்திரா மற்றும் விதர்பா ஆகிய அணிகளுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி அசத்தியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக கோப்பையை வென்ற முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. கடந்த 2016 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2017 இல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் 2018 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி இவர் கோப்பைகளை வென்றார்.
முன்னதாக கடந்த 2014 ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை ₹3.75 கோடிக்கு வாங்கியது. அந்த சமயத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மிக அதிக தொகை இதுவே ஆகும். இவரது கடைசி ஐபிஎல் போட்டி 2025 இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அமைந்தது. ஐபிஎல் தொடரில் 90 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 83 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தனது ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடிய கரன் சர்மா, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். அதே ஆண்டில் ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்து சாதனை படைத்த புகழ்பெற்ற போட்டியில் கரன் சர்மா தனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகத்தைப் பெற்றார். தொடர்ந்து 2014 இறுதியில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே இவரது கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.
தனது முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையில் 97 போட்டிகளில் விளையாடியுள்ள கரன் சர்மா, 14 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தம் 270 விக்கெட்டுகளோடு, பேட்டிங்கில் 2 சதங்களுடன் 2866 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 123 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 153 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட் பயிற்சியாளராகத் தனது அடுத்த பயணத்தைத் தொடர உள்ளதாகக் கூறி, தனக்கு ஆதரவளித்த குடும்பத்தினர் மற்றும் பிசிசிஐ-க்கு கரன் சர்மா நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

