வீர சாகசம்.. வாயை பிளக்க வைத்த ஜடேஜா.. வைரல் வீடியோ.. இங்கிலாந்து வீரர் கிண்டல்!
ஜாம்நகர் : இந்திய அணியின் ஆல் - ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வாளை எடுத்து அதை ஒரு தேர்ந்த போர் வீரனைப் போல சுழற்றி மிரள வைத்தார்.
Recommended Video
அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு வைரல் ஆனது. அந்த வீடியோவைக் கண்ட முன்னாள் இங்கிலாந்து வீரர் அவரை கலாய்த்துள்ளார்.
ஜடேஜா வீட்டில் புல்வெளி வெட்டாமல் இருப்பதை சுட்டிக் காட்டி அவரை கிண்டல் செய்துள்ளார். அதற்கு ஜடேஜா பதிலும் கூறி உள்ளார்.

வீடியோ வெளியிடும் வீரர்கள்
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் மக்கள் சும்மா இருக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். கிரிக்கெட் வீரர்களும் விதிவிலக்கல்ல. பல கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வீட்டில் இருந்து வீடியோ போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

ராஜ வம்சம்
கிரிக்கெட்டில் மின்னல் வேக பீல்டராக கலக்கி வரும் ரவீந்திர ஜடேஜா ராஜ்புத் எனும் ராஜ வம்சத்தை சேர்ந்தவர். அவர் குதிரை ஏற்றம், வாள்வீச்சு ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றவர். கிரிக்கெட் போட்டிகளில் கூட தன் வாள்வீச்சு திறமையை காண்பிப்பார்.

வாள் வீச்சு
போட்டிகளில் அரைசதம், சதம் அடித்தால் கிரிக்கெட் பேட்டை, வாள் போல வீசுவார் ஜடேஜா. அதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூட அதை மகிழ்ச்சியுடன் கைதட்டி ரசிப்பார். இது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, பிற நாட்டு வீரர்கள் மத்தியிலும் பிரபலம்.

வீட்டில் வாள் வீச்சு
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஜடேஜா, தன் வீட்டின் புல்வெளிப் பகுதியில் நின்று உண்மையான வாளை எடுத்து அதை சுழற்றிக் காட்டினார்.
7 லட்சம் பார்வைகள்
ஜடேஜா உண்மையான வீரனைப் போலவே எந்த பிசிறும் இல்லாமல் அந்த வாளை சுழற்றினார். அந்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ 17 மணி நேரத்தில் 7 லட்சம் பார்வைகளை பெற்றது.

மைக்கேல் வாஹன் கிண்டல்
இந்த பதிவின் கீழ் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாஹன் கிண்டல் செய்து இருக்கிறார். ஜடேஜா நின்று இருந்த புல்வெளி சரியாக பராமரிக்கப்படாமல் புற்கள் அதிகமாக உள்ளது. அதை சுட்டிக் காட்டி, புற்களை வெட்ட வேண்டும் என கூறி உள்ளார்.

சூசகமாக கிண்டல்
அதாவது வாளை வைத்து ஜடேஜா சாகசம் செய்த நிலையில், அதை வைத்து புற்களை வெட்டுமாறு சூசகமாக கூறி உள்ளார் மைக்கேல் வாஹன். அதற்கு பதில் அளித்துள்ள ஜடேஜா தனக்கு எப்படி வெட்ட வேண்டும் என தெரியாது என கூறி உள்ளார்.

பணியாட்கள் இல்லை
கொரோனா வைரஸ் காரணமாக பணியாட்கள் வீட்டுக்கு வராததால் அந்த புற்கள் வெட்டப்படவில்லை என்பதையே ஜடேஜா சுட்டிக் காட்டி, "கொரோனா எஃபக்ட்" என குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications