லண்டன்: இந்திய கேப்டன் விராட் கோலி, ஒரு மாடர்ன் டே ஜீசஸ் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்வான் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் இந்திய கேப்டன் விராட் கோலி. அதிக ரன்கள், அதிக வெற்றி என சாதனைகளை தொடர்ந்து வருகிறார். அவரை ரோல் மாடலாக கொண்டு விளையாடி வருவதாக பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் ஆசம் கூட கூறியிருக்கிறார்.
இந் நிலையில் கோலியை இங்கிலாந்து முன்னாள் வீரரான கிராமி ஸ்வான், ஒரு மாடர்ன் டே ஜீசஸ் என்று புகழ்ந்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: கோலி நல்லதொரு உத்வேகத்துடன் விளையாடி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டில், பந்து பட்டுவிட்டதாக நினைத்து உடனடியாக களத்தில் இருந்து பெவிலியன் திரும்பியது மிகவும் கவர்ந்தது.
பேட்டின் நுனியில், பந்து பட்டு அவுட் என தெரிந்தும்கூட, மற்ற வீரர்கள் பெவிலியன் திரும்ப மாட்டார்கள். பேட்டின் நுனியில் பந்து பட்டதும் வெளியேற வில்லை என்றால், அது ஏமாற்று வேலை. ஆனால் கோலி, மற்ற வீரர்களிலிருந்து வேறுபடுகிறார். உலக கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக 77 ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கி கொண்டிருந்தபோது, அவர் அவுட் என நினைத்து வெளியேறினார். நடுவர் கூட எதுவும் சொல்லவில்லை.
ஆனால் உறுதியாக பேட்டில், பந்து பட்டது என நினைத்து வெளியேறியது, சாதாரணமான பேட்ஸ்மேன்கள் செய்யும் காரியம் இல்லை. அவரது இந்த செயல் நேர்மையானது. அவர் ஒரு நவீன ஜீசஸ் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.