
தடுமாறிய இந்தியா
லண்டன் லார்ட்ஸில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஆக.12ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்து. இந்தியா தரப்பில் லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதில், இந்தியா சார்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேப்டன் ஜோ ரூட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். பிறகு, 2ம் இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்கம் சொதப்பினாலும், மிடில் ஆர்டரில் புஜாரா - ரஹானே ஜோடி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடியது. ரஹானே 61 ரன்களும், 45 ரன்களும் எடுத்தனர். அதுவும் கிட்டத்தட்ட இருவரும் இணைந்து 50 ஓவர்களை சந்தித்து இந்த ரன்களை எடுத்தனர்.

8 விக்கெட்டுகள்
பிறகு, 9வது விக்கெட்டுக்கு பும்ரா - ஷமி ஜோடி நிகழ்த்திய அதகளம் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் பும்ராவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். இருவரும் இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 298 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தனர். அதுமட்டுமின்றி, ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தனர். அந்த பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கர்ரன், ஆண்டர்சன் என நான்கு விக்கெட்டுகளை முகமது சிராஜ் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் 4ம் இரண்டாம் இன்னிங்ஸில் 4 என மொத்தம் எட்டு விக்கெட்டுகளை அறுவடை செய்தார் சிராஜ். இதனால், 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்று தொடரில் 1 - 0 முன்னிலை வகிக்கிறது. .

இந்திய அணியின் சொத்து
இந்நிலையில், முகமது சிராஜ் குறித்து சிலாகித்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெஃப்ரீ பாய்காட். இதுகுறித்து அவர், "எனக்கு சிராஜை பிடிக்கும். அவர் ஆற்றல் நிறைந்தவர். எதையும் கட்டுப்படுத்தும்படி யாரும் அவரிடம் சொல்லக்கூடாது. அவர் தனது சொந்த வழியில், சொந்த பாணியில் வளரட்டும். அவர் ஒரு புதிய வீரராக இருந்தாலும், இந்திய அணியின் சொத்து என்பேன்.

ஒற்றுமை
இந்திய அணி ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து எதிரணியை எதிர்த்து ஆடிய விதம் எனக்கு பிடித்திருந்தது. முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பேட்டிங் செய்தபோது [89 ரன்கள் எடுத்த நிலையில்], முழு அணியும் பால்கனியில் இருந்து கரவொலி எழுப்பி, கோஷங்கள் எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தியது.. இந்த விஷயங்கள் ஒற்றுமையைக் கொண்டுவருகின்றன" பாய்காட் சுட்டிக்காட்டினார்.

பிரின்ஸ் ஆஃப் கொல்கத்தா
இங்கிலாந்து வீரர் பாய்காட் யார் என்று தெரிகிறதா? கங்குலிக்கு "தாதா" என்ற செல்லப் பெயர் உண்டு என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுபோல, "பிரின்ஸ் ஆஃப் கொல்கத்தா" என்றும் அவருக்கு பெயர் உள்ளது. அதாவது கொல்கத்தாவின் இளவரசன் என்று அவரை ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இந்த பெயரை கங்குலிக்கு வைத்ததே இங்கிலாந்து வீரர் ஜெஃப்ரே பாய்காட் தான். கங்குலியின் ஆஃப் சைட் ஷாட்ஸ்களை பார்த்து பிரமித்துப் போன பாய்காட், கங்குலிக்கு இந்த பெயரை அளித்தார். அவர் எதேச்சையாக இந்த பெயரை உச்சரிக்க, அதன்பிறகு அதுவே கங்குலியின் டிரேட் மார்க் ஆனது. இன்று அதே பாய்காட், சிராஜ் பவுலிங்கை கண்டு வியந்து, அவரை இந்தியாவின் "சொத்து" என்றே கூறி உச்சத்துக்கு கொண்டுச் சென்றுவிட்டார்.


Click it and Unblock the Notifications











