மும்பை: இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜான் ரைட், தனது சட்டை காலரை பிடித்து தள்ளியதாக முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை மொத்தமாக மாற்றிய வீரர்களில் சவுரவ் கங்குலிக்கு மிக முக்கிய இடமுண்டு. ஏனென்றால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தார். அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஃபார்முக்கு கொண்டு வந்து, இந்தியாவை மிக முக்கிய கிரிக்கெட் சக்திகளில் ஒன்றாக மாற்றினார். சூதாட்ட புகாரில் சிக்கி சின்னபின்னாக மாறிக் கொண்டிருந்த இந்திய அணியை, எழுந்து நிற்க வைத்தவர் தான் சவுரவ் கங்குலி.

அந்த காலக்கட்டத்தில் சவுரவ் கங்குலிக்கு உறுதுணையாக இருந்தவர் பயிற்சியாளார் ஜான் ரைட். எந்த இளம் வீரரை அணிக்குள் கொண்டு வந்தாலும், அவர்களின் திறமையை அறிந்து சர்வதேச தரத்திற்கு மாற்றியவர். இவரது பயிற்சியின் கீழ் தான் இந்திய அணி 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த வகையில் ஜான் ரைட் குறித்து பரபரப்பான தகவல் ஒன்றை இந்திய ஜாம்பவான் வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.
புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வீரேந்தர் சேவாக் பேசுகையில், 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து உடனான போட்டி ஒன்றில் மோசமாக ஆட்டமிழந்து வெளியேறினேன். இதனால் ஓய்வறையில் இருந்து ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ஜான் ரைட், பொறுமையை இழந்துவிட்டார். இதனால் நான் ஓய்வறைக்கு திரும்பிய பின், என் சட்டையின் காலரை பிடித்து தள்ளிவிட்டார். இதனால் எனக்கும் கோபம் வந்துவிட்டது. இதனால் உடனடியாக, பயிற்சியாளர் எப்படி என் சட்டையை பிடித்து தள்ளலாம் என்று இந்திய அணியில் மேலாளராக இருந்த ராஜீவ் சுக்லாவிடம் புகாரளித்துவிட்டேன்.

பின்னர் ராஜீவ் சுக்லா அந்த விவகாரத்தை பிசிசிஐ பொது மேலாளராக இருந்த அம்ரித் மாத்தூரிடம் கொண்டு சென்றார். இதையடுத்து ஜான் ரைட்டுக்கும் எனக்கும் இடையில் அம்ரித் மாத்தூர் தான் சமாதானம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜான் ரைட் - சேவாக் இருவரும் அடுத்த ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்த மோதலும் இன்றி இந்திய அணியில் இருந்தனர். அதன்பின் இந்திய அணியின் நிரந்தர வீரராக மாறி, ஏராளமான சதங்களை சேவாக் விளாசியது குறிப்பிடத்தக்கது.