லண்டன்: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐசிசியின் நீண்டகாலப் போட்டி நடுவருமான (Match Referee) கிறிஸ் பிராட், இந்திய அணிக்குச் சாதகமாகச் செயல்படுமாறு தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகப் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
தனது 20 ஆண்டுகாலப் பணியில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர் கூறியுள்ள இந்தக் குற்றச்சாட்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) நேர்மை மற்றும் செயல்பாடுகள் மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமீபத்தில் 'தி டெலிகிராஃப்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கிறிஸ் பிராட் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: "ஒருமுறை சர்வதேசப் போட்டி ஒன்றில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட மூன்று, நான்கு ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது. விதிகளின்படி, இது அபராதம் விதிக்கப்பட வேண்டிய குற்றம்."
"ஆனால், அப்போது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 'அது இந்திய அணி, எனவே கொஞ்சம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள். நேரத்தை எப்படியாவது சரிசெய்து அபராதத்திலிருந்து தப்பிக்க வையுங்கள்' என்று அந்த அழைப்பில் கூறப்பட்டது. நானும் சரி என்று கூறி, சில காரணங்களைக் கண்டுபிடித்து, அபராத வரம்புக்குக் கீழ் கொண்டு வந்தேன்."
"ஆனால், அடுத்த போட்டியிலேயே மீண்டும் அதே தவறை இந்திய அணி செய்தது. பந்துவீச்சை வேகப்படுத்துமாறு நான் கொடுத்த அறிவுறுத்தல்களை அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இதையடுத்து, நான் மீண்டும் தொலைபேசியில் அழைத்து, 'இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். அதற்கு, 'இந்த முறை அவரைத் (அப்போதைய இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி) தண்டியுங்கள்' என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது. இதிலிருந்து கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே அரசியல் உள்ளது என்பது தெளிவாகிறது" என்று பிராட் கூறியுள்ளார்.
2003-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை ஐசிசி போட்டி நடுவராகப் பணியாற்றிய கிறிஸ் பிராட், 123 டெஸ்ட், 361 ஒருநாள் மற்றும் 138 டி20 போட்டிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தொடர்ந்து பணியாற்ற விரும்பிய போதிலும், அவரது ஒப்பந்தத்தை ஐசிசி புதுப்பிக்கவில்லை.
தனது பணி அனுபவம் குறித்துப் பேசிய அவர், "நான் தொடர்ந்து பணியாற்ற மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், 20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல குண்டுகளில் இருந்து தப்பித்திருக்கிறேன். திரும்பிப் பார்க்கும்போது, 20 ஆண்டுகள் என்பது இந்தப் பணிக்கு மிக நீண்ட காலம் என்று தோன்றுகிறது" என்றார்.
மேலும், "உலகின் சில பகுதிகளுக்குப் பயணம் செய்ய வேண்டியதில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. நான் எப்போதும் சரி, தவறு என்பதில் நம்பிக்கை கொண்டவன். ஆனால் உலகின் சில பகுதிகளில், சரி தவறுக்கு இடையே நிறைய கங்கை ஆறை போல அசுத்தமான நீர் ஓடுகிறது. அதை நீங்கள் சமாளிக்க வேண்டும். இதுபோன்ற அரசியல் நிறைந்த சூழலில் 20 ஆண்டுகள் தாக்குப்பிடித்தது ஒரு பெரிய சாதனை என்றே நினைக்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
2009-ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது, கிறிஸ் பிராட் அந்தப் பேருந்தில்தான் இருந்தார். அந்தச் சம்பவம் தனது பணியின் மீதான பார்வையை முற்றிலுமாக மாற்றிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ் பிராடின் இந்தக் குற்றச்சாட்டுகள், சர்வதேச கிரிக்கெட்டில் பிசிசிஐ-யின் செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது என்ற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. இது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.