மும்பை : இந்திய கிரிக்கெட் "ஏ" அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
தற்போது, அமைக்கப்பட்டுள்ள பி.சி.சி.ஐ. ஆலோசனை குழுவில் சவ்ரவ் கங்குலி, சச்சின் தெண்டுல்கர் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மன் ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த குழுவில் டிராவிட் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் இடம்பெறாததற்கு ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் அதிருப்தி தெரிவித்தனர்.
ஆனால், டிராவிட்டுக்கு பெரிய பொறுப்பு காத்திருப்பதாகவும், முன்னாள் வீரர்களின் தகுதிக்கு ஏற்ப அவர்களின் சேவையை பயன்படுத்திக்கொள்ள பி.சி.சி.ஐ. விரும்புவதாகவும் அதன் செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியா "ஏ" அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
மேலும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.