கொழும்பு: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) தனது அணியின் பயிற்சியாளர் குழுவை பலப்படுத்தும் வகையில் ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரை தனது அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக இலங்கை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம், இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதரை தங்களது அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இலங்கை நியமித்திருந்தது. தற்போது விக்ரம் ரத்தோரும் இணைந்துள்ளதால், இலங்கை அணியின் முக்கியப் பயிற்சியாளர் பொறுப்புகளில் இரண்டு அனுபவமிக்க இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் இந்திய அணி 2024-ல் உலகக் கோப்பை வென்றபோது அந்தப் பயிற்சியாளர் குழுவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக உள்ள விக்ரம் ரத்தோர், வரும் ஜனவரி 15-ம் தேதி இலங்கை அணியுடன் அதிகாரப்பூர்வமாக இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் 2019 முதல் 2024 வரை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றினார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மற்றும் 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது.
பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இதற்காக இலங்கை அணி தனது பந்துவீச்சுப் பிரிவை பலப்படுத்த ஏற்கனவே பந்துவீச்சு ஜாம்பவான் லசித் மலிங்காவை குறுகிய கால அடிப்படையில் ஆலோசகராக நியமித்துள்ளது.
தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி விளையாடி வரும் நிலையில், உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் பிப்ரவரி 8-ம் தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
பிப்ரவரி 8: அயர்லாந்துக்கு எதிராக (கொழும்பு)
பிப்ரவரி 12: ஓமன் அணிக்கு எதிராக (பல்லேகலே)
பிப்ரவரி 16: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (பல்லேகலே)
பிப்ரவரி 19: ஜிம்பாப்வே அணிக்கு எதிராக (கொழும்பு)