ஐபிஎல் தொடரில் சூதாட்டம்.. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கைது.. கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி
வதோதரா:ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் பயிற்சியாளர் டுஷார் அரோத்தே கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய மகளிர் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டுஷார் அரோத்தே. அணியின் உலக கோப்பை தொடருக்கு பின் அவர் பயிற்சியாளர் பணியில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது.
மகளிர் அணியின் மூத்த வீராங்கனைகள் அளித்த புகார் மீது பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்தது. குறிப்பாக 20 ஓவர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் புகாரே அந்த நடவடிக்கைக்கு காரணமாக அமைந்தது. அவரின் நீக்கம்... அந்த தருணத்தில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

ரகசிய தகவல்
இந் நிலையில், ஐபிஎல் சூதாட்டத்தில் அவர் ஈடுபட்டதாக வதோதரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வதோதராவில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சோதனையில் கைது
இதையடுத்து, தனிப்படையினர் அந்த ஓட்டலுக்குள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டுஷார் அரோத்தே கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 பேர் கைது, பறிமுதல்
அவருடன்... 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரிடம் இருந்தும், போன்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் இது தொடர்பான விசாரணை நடத்தப் படும் போது பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி
ஐபிஎல் சூதாட்ட புகாரில் மகளிர் கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளரே கைது செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த சம்பவம் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications