மும்பை: இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான அன்சுமான் கெய்க்வாட் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அண்மையில் பிசிசிஐ சார்பாக இவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1 கோடி அளிக்கப்பட்ட நிலையில், திடீரென உயிரிழந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1974 முதல் 1982 வரையிலான காலகட்டத்தில் இந்திய அணியின் மாற்று தொடக்க வீரராக தொடர்ந்து விளையாடி வந்தவர் அன்சுமான் கெய்க்வாட். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அன்சுமான் கெய்க்வாட், 2 சதங்கள் மற்றும் 10 அரைசதங்களை விளாசி இருக்கிறார். அதேபோல் முதல்தர போட்டிகளில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.

205 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அன்சுமான் கெய்க்வாட், 37 சதங்கள் மற்றும் 47 அரைசதங்களை விளாசியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக 11 மணி நேரம் களத்தில் நின்று இரட்டை சதம் விளாசியது இவரின் மிகச்சிறந்த இன்னிங்ஸாக அமைந்தது. அதன்பின் 1982ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த அவர், 1997 முதல் 1999 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார்.
இவரின் பயிற்சியின் கீழ் பல்வேறு தோல்விகள், அணிக்குள் இருந்த பிரச்சனைகள் சமாளிக்க முடியாததால், கபில் தேவ் இவரின் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார். அதன்பின் கென்யாவுக்கு பயிற்சியாளராக சில ஆண்டுகள் செயல்பட்ட நிலையில், 2009ஆம் ஆண்டு முழுநேர பயிற்சியாளராக செயல்பட முடியாது என்று பொறுப்பை ஏற்க மறுத்தார்.
71 வயதான அன்சுமான் கெய்க்வாட் கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக லண்டனில் சிகிச்சை பெற்று வந்த அன்சுமான் கெய்க்வாட்-ன் மருத்துவ செலவுகள் அவரின் குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியாக சிக்கலை கொடுத்தது. இதனால் வேறு வழியின்றி வதோதரா கொண்டு வரப்பட்டார்.
இதன்பின் இந்திய ஜாம்பவான் கபில் தேவ் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப பிசிசிஐ தரப்பில் உடனடியாக ரூ.1 கோடி மருத்துவ செலவுகளுக்காக அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி அன்சுமான் கெய்க்வாட் உயிரிழந்தார். இதனால் இந்திய ஜாம்பவான்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.