மும்பை: முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷி லண்டனில் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77 ஆகும். அவருக்கு காலிந்தி என்ற மனைவியும், நயன் என்ற மகனும், விஷாகா என்ற மகளும் உள்ளனர்.
32 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 100க்கும் அதிகமான டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய ஒரே இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்தவர் ஆவார் திலீப் தோஷி. இடது கை சுழற்பந்து வீச்சாளராக இருந்த அவர், இந்திய அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். 15 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 22 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

1979 முதல் 1983 வரை அவர் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். அவரது இறப்புக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்து இருக்கிறது. திலீப் தோஷி 1947ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று பிறந்தார். குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், மேற்கு வங்காளத்தில் வளர்ந்தார். 30 வயதிற்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி 100 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்கு சர்வதேச பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தார் திலீப் தோஷி. மிகக் குறுகிய காலகட்டத்தில் அவர் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னையில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் திலீப் தோஷி அறிமுகமானார். 1979 செப்டம்பர் அன்று நடந்த அந்தப் போட்டியின் போது அவர் 30 வயதைக் கடந்திருந்தார்.
தனது முதல் போட்டியிலேயே முதல் இன்னிங்ஸில் 103 ரன்களை விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்தப் போட்டியில் இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். அதன் பிறகு அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டார்.
சிறந்த பந்துவீச்சாளராக இருந்த அவர் படுமோசமான பேட்ஸ்மேனாகவும் அறியப்பட்டார். டெஸ்ட்டில் அவரது பேட்டிங் சராசரி 4.6 மட்டுமே. மேலும் அவர் பேட்டிங் செய்த 38 இன்னிங்ஸ்களிலும் 11ஆவது இடத்தில்தான் பேட்டிங் செய்தார். அதாவது, அனைவரும் பேட்டிங் செய்த பிறகு கடைசியாகவே அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, அவர் தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார். 1980இல் நடந்த அந்தப் போட்டியில் அவர் 30 ரன்களை விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவே அவரது சிறந்த ஒருநாள் போட்டி பந்துவீச்சாகவும் உள்ளது. அவரது ஒருநாள் போட்டி சராசரி 23.81 என்பதாகவும், எக்கானமி 3.96 என்பதாகவும் உள்ளது.
அதே சமயம் அவரது ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் சராசரிக்கும் கீழாகவே இருந்தது. அதனால் 1983 உலகக்கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ரவி சாஸ்திரி இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு திலீப் தோஷிக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.