மன அழுத்தமா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் உண்மையில் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே. எதிர்பார்த்த அளவு இல்லை. டாப் வீரர்களில் ஒருவர் கூட அணியை காப்பாற்றும் பணியில் ஈடுபடவில்லை. குறிப்பாக, புஜாரா மீது இன்றும் புகார் கடிதம் வாசிக்கப்பட்டு வருகிறது. அவர் உண்மையில் ஃபார்மில் தான் இருக்கிறாரா? அல்லது இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் போல மனஅழுத்தத்தில் சிக்கிக் கொண்டு தவிர்க்கிறாரா? என்று தெரியவில்லை. "X-Factor" என்று வர்ணிக்கப்படும் ரிஷப் பண்ட்டால் கூட, தேவைப்பட்ட நேரத்தில் ரன்களை அடிக்க முடியவில்லை.
தனித்தனி கேப்டன்
இது எல்லாவற்றையும் விட மேலாக, விராட் கோலி பேட்டிங்கிலும் ஒன்றும் செய்யவில்லை. கேப்டன்சியிலும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. இதனால், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் கேள்வி எழுப்பப்டுகிறது. ஏற்கனவே ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளுக்கு என தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்து வரும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி கோலிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
நியூசிலாந்து செம
உலகக் கோப்பை டைட்டிலை வசமாக்க முடியாமல் பல ஆண்டுகளாக திண்டாடிக் கொண்டிருந்தது நியூசிலாந்து. ஒவ்வொரு சீஸனிலும், ஒவ்வொரு ஐசிசி தொடர்களிலும், அரையிறுதி அல்லது இறுதி வரை முன்னேறி தோற்பது தான் இத்தனை ஆண்டுகாலமாக நியூசிலாந்தின் அமைப்பாக இருந்து வந்தது. இப்படி பலகட்ட சோதனைகளுக்கு பிறகு நியூசிலாந்து டெஸ்ட் கோப்பையை வென்றிருப்பது அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாது நிகழ்வாக அமைந்துள்ளது. உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் பரவலாக வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இங்க ஜெயிக்கணும்
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "நீங்கள் ஒரு நல்ல கேப்டனாக இருக்கலாம், ஆனால் நீங்கள் எந்த பட்டத்தையும் வெல்லவில்லை என்றால், மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு நல்ல கேப்டனாகவும் நல்ல திட்டங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் உங்கள் பந்து வீச்சாளரால் அதை செயல்படுத்த முடியாமல் போகலாம். எனவே அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்திலும் இருக்க வேண்டும். போட்டிகளில் வென்றவர்களை மட்டுமே மக்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள்.
வெற்றிகரமான கேப்டன் யார்?
"சில நேரங்களில் நீங்கள் ஒரு சிறந்த கேப்டனாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் அணி மிகவும் சிறப்பாக விளையாடி, கோப்பையை வென்றுவிடும். ஆனால், அங்கு அந்த கேப்டனின் செயல்பாடுகள் குறித்து யாரும் பேசமாட்டார்கள். கடைசியில் அவர் கோப்பையை வென்ற கேப்டன் என்பதே பேசப்படும். அவரே வெற்றிகரமான கேப்டனாகிறார்.
நுட்பம் வேண்டும்
கேன் வில்லியம்சன் ஒரு கேப்டனாக தனது அணிக்கான பங்களிப்பை எப்படி கொடுக்கிறார் என்பதை கோலி கவனிக்க வேண்டும். விராட் கோலி எந்த ஐ.சி.சி கோப்பைகளையும் வெல்லவில்லை, ஐ.பி.எல் கோப்பையும் வென்றதில்லை. அவர் ஒரு உயர்மட்ட கிரிக்கெட் வீரர், அபாரமான உடல் மொழி மற்றும் ஆக்ரோஷமானவர். அவரது எனர்ஜி லெவல் நிலை வேறு தளத்தில் உள்ளது. ஒவ்வொரு முறையும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய களமிறங்குகையில், தனது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறார். ஆனால் கேப்டன்கள் நுட்பமாக இருக்க வேண்டுமே தவிர, எந்நேரமும் ஆக்ரோஷமாக இருக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.