கராச்சி: இந்தியா, வங்கதேசம் இடையிலான போட்டியின் முடிவு சந்தேகத்துக்குரியதாக உள்ளது. இதுகுறித்து ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் தெளசீப் அகமது கூறியுள்ளார்.
அப்போட்டியில் வங்கதேச அணி சிறப்பாக ஆடி வந்தது. கடைசி ஓவரில் அது ஏன் தலைகீழாக மாறிப் போனது என்று புரியவில்லை. இது சந்தேகத்திற்கிடமாக உள்ளது. எனவே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அகமது கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், போட்டி முடிந்த விதம் எனக்குச் சரியாகப்படவில்லை. திடீரென கடைசி ஓவரில் வங்கதேசம் சொதப்பியது சந்தேகத்திற்கிடமாக உள்ளது
வங்கதேசம் இப்போது அனுபவம் இல்லாத அணி அல்ல. நிறைய விளையாடியுள்ளனர். அனுபவம் வாய்ந்தவர்களாக மாறியுள்ளனர். எப்படி அவர்கள் இந்தப் போட்டியை டையில் முடிக்க முயலாமல் அடித்து ஆட முயன்றார்கள் என்பதுதான் எனது கேள்வி.
எனது அனுபவத்தைப் பார்க்கும்போது இது சந்தேகத்திற்குரிய முடிவு என்பதில் சந்தேகம் இல்லை. வேறு எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை. ஐசிசி நிச்சயம் இதை விசாரிக்க வேண்டும். தவறு நடந்தால் நிச்சயம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
இந்தப் போட்டியில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது. 3 பந்துகளில் 2 ரன்கள் என்ற நிலையில் வங்கதேசம் இருந்தது. ஆனால் கடைசி 3 பந்துகளில் விக்கெட்களை அது அடுத்தடுத்து பறி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.