திருமணம்... 3வது "இன்னிங்ஸை" தொடங்கினார் இம்ரான்கான்!
டெல்லி: முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும், தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் 3வது முறையாக திருமணம் செய்துள்ளதாக பாகிஸ்தானிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டுதான் தனது இரண்டாவது திருமணத்தை முறித்துக் கொண்டார் இம்ரான் கான். இந்த நிலையில் தற்போது 3வது திருமண பந்தத்தில் அவர் நுழைந்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த 3வது திருமமம் லண்டனில் சில நாட்களுக்கு முன்பு மிகவும் எளிய முறையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் திருமணம் செய்துள்ள பெண்ணின் பெயர் மரியம் என்று கூறப்படுகிறது. இவர் புஷ்ரா என்பவரின் சகோதரி ஆவார். இந்த புஷ்ராதான் இம்ரான் கானுக்கு மத ரீதியான ஆலோசனைகள், விழிகாட்டுதல், அறிவுரைகளைக் கூறுபவர் ஆவார். பாகிஸ்தானில் பிரபலமான மேனகா குடும்பத்தைச் சேர்ந்தவர் புஷ்ரா.
மர்யம் தனது கணவரை விவாகரத்து செய்தவர். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முன்னதாக திருமணம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு இம்ரான் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், எனக்கு இப்போது 63 வயதாகிறது. நான் 10 வருட காலமே திருமண பந்தத்தில் இருந்துள்ளேன். என்னைப் போல ஒரு பேச்சலர் வாழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்க முடியாது. அப்படி வாழ பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால் முன்பை விட இப்போதுதான் எனக்கு திருமண பந்தத்தின் மீது அதிக ஆசை வந்துள்ளது. திருமணம் என்று ஒன்று நடந்தால் அது மேலும் என்னைப் பண்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இம்ரான் கானின் முதல் மனைவி பெயர் ஜெமீமா கோல்ட்ஸ்மித். 9 வருட கால வாழ்க்கைக்குப் பின்னர் 2004ம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். ஜெமீமா இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அடுத்து கடந்த 2015ல் பாகிஸ்தானைச் சேர்ந்த 42 வயதான டிவி பத்திரிகையாளர் ரெஹம் கான் என்பவரை மணந்தார் இம்ரான். ஆனால் 10 மாதத்தில் இது முடிவுக்கு வந்து விட்டது.


Click it and Unblock the Notifications