"பாகிஸ்தான் கோச் ஆக இருக்க பயமா இருக்கு.. சொந்த நாட்டிலேயே..".. ஜாம்பவான் முஷ்டாக் அகமது ஓபன் டாக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சமீபத்திய குளறுபடியான முடிவுகள் காரணமாக, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கத் தனக்குப் பயமாக இருப்பதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் முஷ்டாக் அகமது வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராகச் செயல்படத் தயாராக இருந்தாலும்,
தற்போது வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் முஷ்டாக் அகமது, பிபிசி-யின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இங்கிலாந்துக்கு எதிரான 2 மோசமான தோல்விகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணித் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பாதியில் நீக்கியது குறித்து அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய அவர், "எனது தாய் நாட்டிற்குச் சேவை செய்ய நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். குறிப்பாக இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு உதவ விரும்புகிறேன். ஆனால், நமது சொந்த நாட்டிலேயே நமக்கு உரிய மரியாதை கிடைக்காத போது அங்கு வேலை செய்யப் பயமாக இருக்கிறது. சில உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளால், ஒரு தொடரின் நடுவிலேயே பயிற்சியாளர்களையும் வீரர்களையும் நீக்குவது கவலையளிக்கிறது" என்றார்.
சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது, அவரது உதவியாளர் உமர் குல் மற்றும் 7 முக்கிய வீரர்களை பாகிஸ்தான் வாரியம் அதிரடியாக நீக்கியது. இது குறித்துப் பேசிய முஷ்டாக் அகமது, "பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்று ஒரே நேரத்தில் பலரை நீக்கியது இதற்கு முன்பு நடந்ததே இல்லை. சர்பராஸ் மற்றும் உமர் குல் ஆகியோர் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களை நீக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், தொடர் முடிந்த பிறகு செய்திருக்க வேண்டும். பாதியில் அவர்களை நீக்கி அவமதிப்பது தவறானது" என்று கூறினார்.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது இந்த அவசரப் போக்கை மாற்றிக்கொண்டு, பயிற்சியாளர்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் அளித்தால் மட்டுமே தன்னைப் போன்ற முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்குச் சேவை செய்ய முன்வருவார்கள் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications


