இஸ்லாமாபாத்: இன்று நடந்து கொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 14ம் தேதி துவங்கியது. இந்நிலையில் இன்று காலை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் துவங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்கள் டோணியின் அதிரடி ஆட்டத்தை ரசித்து பார்க்கிறார்கள். அவர் சிறந்த மனிதர். அவர் சிறப்பாக விளையாட எனது வாழ்த்துக்கள். ஒரு பாகிஸ்தானியராக என் நாட்டு அணி வெற்றி பெற விரும்புகிறேன்.
விராத் கோஹ்லி, டோணி என்று பேட்ஸ்மேன்களை கொண்ட இந்திய அணி பாகிஸ்தான் அணியை விட வலுவாக உள்ளது. பாகிஸ்தான் அணியால் சிறந்த அணியை தோற்கடிக்கவும் முடியும், மோசமான நிலையில் உள்ள அணியிடம் தோற்கவும் முடியும். விளையாட்டை விளையாட்டாகவே கருத வேண்டும். ஒரு முறை லாகூரில் நடந்த போட்டியில் இந்திய அணி விளையாடுகையில் பாகிஸ்தான் மக்கள் அணியை ஊக்குவித்தனர் என்றார்.