டெல்லி: இந்திய கிரிக்கெட்டை நிர்வகித்து வரும் பிசிசிஐயின் அடுத்த செயலாளர் ஆக ரோகன் ஜெட்லி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவருக்கு எதிராக மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத்.
டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்புக்கான தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ரோகன் ஜெட்லி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் போட்டி இடுகின்றனர். கீர்த்தி ஆசாத் 1983 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர் ஆவார்.

அவர் டெல்லி மாநில அணிக்காக 95 ரஞ்சி ட்ராபி போட்டிகளில் ஆடி இருக்கிறார். மறுபுறம் ரோகன் ஜெட்லி மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ஆவார். டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் பல்வேறு பதவிகளில் அருண் ஜெட்லி பதவி வகித்து இருந்தார். அவரது மறைவுக்குப் பின் ரோகன் ஜெட்லி டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பில் பல்வேறு பதவிகளில் இடம் பெற்று வருகிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ரோகன் ஜெட்லி டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கிறார். மீண்டும் தற்போது தலைவர் பதவிக்கான தேர்தலில் நிற்கிறார். இந்த நிலையில் கீர்த்தி ஆசாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டெல்லி மாநில கிரிக்கெட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அணியில் வீரர்களை தேர்வு செய்வதாக குற்றம் சுமத்தி இருக்கிறார்.
இது பற்றி பேசுகையில், டெல்லி மாநில அணிக்காக தனது பள்ளி பருவத்தில் இருந்து விளையாடி உள்ளதாகவும், டெல்லி கிரிக்கெட் மைதானத்துடன் தனக்கு உணர்வுபூர்வமான பந்தம் இருப்பதாகவும், ஆனால் இங்கு நிறைய ஊழல் நடப்பதாகவும் கூறி இருக்கிறார்.
டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் இயக்குனர்களின் குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதும், ஒரு வீரரை அணியில் தேர்வு செய்வதற்கு லஞ்சம் வாங்கப்படுவதையும் தான் பார்த்திருப்பதாகவும், திறமையான இளம் வீரர்களுக்கு பதிலாக மற்றவர்கள் தேர்வு செய்யப்படுவது தன்னை காயப்படுத்தி இருப்பதாகவும் கீர்த்தி ஆசாத் கூறி இருக்கிறார்.