அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஏகப்பட்ட தவறுகளை பாகிஸ்தான் செய்து தோற்றதாக குற்றம்சாட்டியுள்ளனர் அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்.
உலக கோப்பையில் நேற்று அடிலெய்டில் நடந்த போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் 76 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. பாகிஸ்தானின் தொடக்க மற்றும் ஒன்-டவுன் பேட்ஸ்மேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அச்சுறுத்தலை கொடுத்த போதிலும், மிஸ்பா உல் ஹக் அதிரடி காட்டிய போதிலும் பாகிஸ்தான் மோசமாகவே தோல்வியடைந்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் ஜாகீர் அப்பாஸ் கூறியது: பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் ஏகப்பட்ட தவறுகளை செய்தனர். கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் பாடம் கற்கவில்லை. யூனிஸ் கானை ஓப்பனிங்கில் களமிறக்கியிருக்க கூடாது. சர்பாஸ் அகமதை பேட்டிங் வரிசையில் கீழே இறக்கியிருக்க கூடாது. அதேபோல உமர் அக்மலை விக்கெட் கீப்பராக்கியிருக்க கூடாது.
பாகிஸ்தானிடம் எந்த ஒரு திட்டமிடலும் இல்லை. எனவே தப்புக்கு மேலே தப்பு செய்தோம். வழக்கத்திற்கு மாறாக உமர் அக்மலை கீப்பராக களமிறக்கியதால்தான் விராட் கோஹ்லி அளித்த கேட்ச் உள்ளிட்ட சில கேட்சுகளை அவர் தவறவிட்டார். நெருக்கடியான நேரத்திலும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மோசமாக ஷாட் அடித்து அவுட் ஆனார்கள். எப்போதுதான் நாம் பாடம் கற்கப்போகிறோம். ஆண்டு முழுக்க கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஆனாலும் பாகிஸ்தான் வீரர்களை பாடம் கற்பதில் இருந்து யார் தடுத்தார்கள்? என்று அப்பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து நட்சத்திரம் சக்லைன் முஷ்டாக் கூறியது: முழுமையாக பணியாற்றக் கூடிய விக்கெட் கீப்பர் இல்லாமல் பாகிஸ்தான் தடுமாறிவருகிறது. அணியின் நிலைமையை கருத்தில் கொண்டு யூனிஸ்கானை ஓப்பனிங்கில் இறக்கியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் முழுநேர தொடக்க ஆட்டக்காரரை உருவாக்குவதில் பாகிஸ்தான் தவறிவருகிறது என்பதையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் மோசின் கான் கூறுகையில், "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் இந்த தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அணியை முற்றிலுமாக அழித்துவிட்டது கிரிக்கெட் வாரியம்" என்று கோபத்தோடு கூறினார்.
இந்திய முன்னாள் அதிரடி வீரர் ஸ்ரீகாந்த் கூறுகையில், "இந்தியா ஆட்டத்தின் தொடக்கம் முதலே பாசிட்டிவாக ஆடியது. எந்த ஒரு இடத்திலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுத்து ஆடவில்லை. ரன்களை எளிதாக பெற்றனர். அதேநேரம் மிகப்பெரிய இலக்கை துரத்திய பாகிஸ்தானோ, இந்திய பவுலர்களின் கட்டுக்கோப்பை குலைக்க முயலவில்லை. அஸ்வின் 3 மெய்டன் ஓவர்கள் வீசும் அளவுக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பொறுமையாகத்தான் இருந்தனர். ரிஸ்க் எடுத்து ஆடி வெற்றி பெற முடியலவில்லை" என்றார்.