
அணியில் வாய்ப்பு
இலங்கையைச் சேர்ந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுராஜ் ரந்தீவ். ரைட் ஆர்ம் ஆஃப் ஸ்பின்னர். இலங்கை அணியில் 2009ம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதன் பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்கு எதிராக முதன் முதல் அறிமுகமானார். எல்லாம் நன்றாகவே அவருக்கு சென்றுக் கொண்டிருந்தது. இலங்கை அணிக்காக மொத்தம் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை, 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளையும், 7 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். 127 முதல் தர கிரிக்கெட்டில் ஆகியிருக்கும் ரந்தீவ், 578 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளார். இதனால் தான் இவருக்கு சர்வதேச கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்தது.

சதத்தை தடுத்த சுராஜ்
இவரை ஏன் 90'ஸ் கிட்ஸ் மறந்திருக்க மாட்டார்கள் என்று சொன்னே தெரியுமா? அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. கடந்த 2010ல் டம்புல்லா ஸ்டேடியத்தில் இந்தியா - இலங்கை அணிகள் இடையே 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் ஆடிய இலங்கை 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தில்ஷன் 45 ரன்கள் எடுத்திருக்க, இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரர் சுராஜ் ரந்தீவ் தான். 43 ரன்கள் அடித்தார். பிறகு களமிறங்கிய இந்திய அணியில் சேவாக் இலங்கை பவுலர்களை விட்டு விளாசிக் கொண்டிருந்தார். வெற்றிக்கு இன்னும் ஓர் ரன் தேவை என்றிருந்த போது, ஸ்டிரைக்கில் 99 ரன்களுடன் நின்றுக் கொண்டிருந்தார் சேவாக். பந்து வீசியது சுராஜ் ரந்தீவ். வாகாக வந்த பந்தை ஸ்ட்ரெய்ட்டில் பிரம்மாண்ட சிக்ஸருக்கு தூக்கினார் ஷேவாக். ஆனால், சுராஜ் வீசியது நோ-பால். இதனால், அவர் வீசிய போதே, இந்திய அணி ஒரு ரன் பெற்று வெற்றிப் பெற்றுவிட, அந்த சிக்ஸர் செல்லாமல் போனது. சேவாக்கிற்கு சதமும் கிடைக்கவில்லை. அப்போது அந்த விவகாரம், ஊடகங்களால் பெரியளவில் விமர்சிக்கப்பட்டது. சுராஜ், சேவாக்கின் சதத்தை தடுக்கும் வகையில் வேண்டுமென்றே நோ-பால் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு சக இலங்கை வீரர்களும் உடந்தை என்றும் கூறப்பட்டது.

சிஎஸ்கே அணியில் சுராஜ்
அதே சுராஜ் ரந்தீவ் தான் இப்போது ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2011ம் ஆண்டு, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். அவர் இரண்டு சீசன்கள் தோனி தலைமையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். பிறகு, 2012ல் அவர் அணியில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார். பிறகு ஆஸ்திரேலியாவில் செட்டிலான ரந்தீவ், இப்போது மெல்போர்ன் நகரில் 'Transdev' பேருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மட்டுமின்றி, முன்னாள் இலங்கை வீரர் சிந்தகா ஜெயசிங்கே மற்றும் முன்னாள் ஜிம்பாப்வே வீரர் வேடிங்டன் வாயேங் ஆகியோரும் இதே பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநர்களாக பணியாற்றி வருகின்றனர்.

உதவி செய்த சுராஜ்
இருப்பினும், ஆஸ்திரேலியாவில் மாவட்ட அளவிலான போட்டிகளிலும், டான்டெனாங் கிரிக்கெட் கிளப்பிலும் சுராஜ் ரந்தீவ் விளையாடி வருகிறார். இதுகுறித்து 9 நியூஸ்க்கு ரந்தீவ் அளித்த பேட்டியில், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த இந்தியாவிற்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு தயார் செய்ய ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணிக்கு உதவி செய்ததாக கூறினார். அதாவது, இந்திய ஸ்பின்னர்களை சமாளிக்கும் பொருட்டு, பயிற்சி மேற்கொள்ளும் விதமாக, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச இவருக்கு அழைப்பு விடுத்தது. அதை ஏற்றுக் கொண்ட சுராஜ், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசினார். ஆனால், அத்தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











