லண்டன்: நடிகர் விஜய்யின் சினிமா வசனத்தை மேற்கோள் காட்டி, இங்கிலாந்துக்கு எதிரான இலங்கை வெற்றியை பதிவிட்டிருக்கிறார் முன்னாள் வீரரான ரசல் அர்னால்டு.
உலக கோப்பை தொடரை மோசமாக தொடங்கிய இலங்கை, முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை தான் பெற்றது. மோசமாக ஆடிவந்த இலங்கை, உலக கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தி ஆடிவந்த இங்கிலாந்தை நேற்று எதிர்கொண்டது. போட்டியில் கண்டிப்பாக இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.

ஆனால், போட்டி முக்கால்வாசி கடந்த பின்னர், நிலவரமே தலைகீழாக மாறிப் போனது. இங்கிலாந்து தான் ஜெயிக்க போகுது என்று டிவியை ஆப் பண்ணி விட்டு, காலையில் எழுந்தவர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை இலங்கை கைப்பற்றி இருந்தது.
காரணம்.. மலிங்காவின் சிறப்பான பந்துவீச்சு, டி சில்வாவின் திருப்புமுனை விக்கெட், ஆட்டமிழக்காமல் மேத்யூஸ் எடுத்த 85 ரன்கள் தான். லீட்ஸில் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றது இலங்கை.
இந்த வெற்றி இலங்கை ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இது குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரசல் அர்னால்டு இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்து கூறியிருப்பது புதிதல்ல. நடிகர் விஜய்யின் திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டியிருப்பது தான் ஸ்பெஷல்.
டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: " டேய் மார்கன், எப்போ வந்தோம் ங்கறது முக்கியம் இல்ல டா, புல்லட் எப்டி எறங்குது ங்கறது தான் முக்கியம்" என்று பதிவிட்டிருக்கிறார். விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளதோடு, பிகில் படத்தை தீபாவளிக்கு காண ஆவலாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் ரசல் அர்னால்டு.