மொஹாலி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் போட்டியில் வென்றது இந்திய அணி.
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டி நடந்த மொஹாலி ஆடுகளத்தில் சேஸிங் செய்வது எளிது என்பதால் இந்தியா நம்பிக்கையுடன் சேஸிங் செய்யத் துவங்கியது. துவக்க வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட் 71, சுப்மன் கில் 74 ரன்கள் குவித்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து இஷான் கிஷன் 18 ரன்களில் வெளியேறினார். கேப்டன் கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் பொறுப்பாக நிதான ஆட்டம் ஆடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். சூர்யகுமார் சரியாக அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ராகுல் கடைசி வரை நின்று 58 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டு கிடைத்த இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2008இல் செய்த ஒரு சாதனையை மீண்டும் செய்துள்ளது. அதாவது இந்திய அணி சேஸிங் செய்து வெற்றி பெற்ற போட்டிகளில் நான்கு வீரர்கள் அரைசதம் அடிப்பது இது மூன்றாவது முறை ஆகும்.
முன்னதாக 2006 மற்றும் 2008இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் நான்கு வீரர்கள் 50 ரன்களுக்கும் மேல் அடித்து சேஸிங்கில் வெற்றி தேடித் தந்துள்ளனர்.
அதன் பின் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் இப்போது ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில், ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து இந்திய அணியை சேஸிங்கில் வெற்றி பெற வைத்துள்ளனர்.
மூன்றாவது முறையாக இந்திய அணி இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது. இந்திய அணி பேட்டிங் சிறப்பாக இருப்பதையே இந்த சாதனை காட்டுகிறது.