திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது மதுரை அணி. இதன் மூலம் இந்த சீசனில் நான்காவது வெற்றியைப் பெற்றது மதுரை.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் பரத் சங்கர் 29, மணிபாரதி 33 ரன்கள் குவித்தனர். அடுத்து வந்த பாபா இந்திரஜித் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த எஸ். சுரேஷ் குமார் ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுத்தார். எஸ். வசந்த் சரவணன் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் விளாசினார். மதுரை அணியின் ராஹில் ஷா 3 விக்கெட்களையும், ஜே. கவுசிக் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய மதுரை அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டி. ரோஹித் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது ஜோடி சேர்ந்த கே.பி. அருண் கார்த்திக் மற்றும் தலைவன் சற்குணம் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டு ரன்களை குவித்தனர்.
கே.பி. அருண் கார்த்திக் அபாரமாக விளையாடி 45 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தலைவன் சற்குணம் 36 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 70 ரன்கள் குவித்தார்.
இறுதியில் 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில், தான் விளையாடிய 5 ஆட்டங்களில் மதுரைக்கு நான்காவது வெற்றி கிடைத்தது. 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.