மும்பை: துலீப் டிராபி கோப்பையை இந்தியா ஏ அணி கைப்பற்றியுள்ள நிலையில், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு அசத்திய டாப் 5 பவுலர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம். அதிலும் இந்திய அணியில் விரைவில் தேர்வு செய்யப்படக் கூடிய 5 இளம் வீரர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்ப்போம்.
துலீப் டிராபி தொடரை இந்தியா சி அணியை வீழ்த்திய இந்தியா ஏ அணி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி தொடர்ச்சியாக 2வது முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்த துலீப் டிராபி தொடரில் பேட்ஸ்மேன்களை விடவும் பவுலர்களின் பலரும் மிகச்சிறப்பாக செயல்பட்டனர்.

அதில் முதல் வீரராக இந்தியா சி அணிக்காக ஆடிய அன்சுல் கம்போஜை சொல்ல முடியும். ஏனென்றால் 23 வயதாகும் அன்சுல் கம்போஜ், 3 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதிலும் 2வது சுற்றுப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுவரை 16 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடிய இவர், விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த வரிசையில் 2வது வீரராக நவ்தீப் சைனி இருக்கிறார். ஏற்கனவே இந்திய அணிக்காக விளையாடி இருந்தாலும், இம்முறை பவுலிங்கில் சிறந்த கட்டுப்பாட்டை கொண்டுள்ளார்.
3 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நவ்தீப் சைனி, பேட்டிங்கில் அசத்தலாக செயல்பட்டுள்ளார். இவரிடம் நல்ல வேகம் இருப்பதால், இந்திய அணியில் விரைவாக மீண்டும் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் 3வது இடத்தில் இருப்பது வைஷாக் விஜயகுமார் தான். ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் இவர், துலீப் டிராபியில் இந்தியா சி அணிக்காக விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த ரஞ்சி சீசனில் கர்நாடகா அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர், 23 முதல்தர போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். புதிய பந்தில் சிறப்பாக ஸ்விங் செய்யக் கூடியவர் என்பதால், தீபக் சஹர் போன்ற வீரர்களுக்கான சிறந்த மாற்றாக இருப்பார். இதில் 4வது பவுலராக இருப்பவர் இந்தியா சி அணிக்காக ஆடிய மானவ் சுதார். ரவீந்திர ஜடேஜாவுக்கான சிறந்த மாற்று வீரராக இருப்பார் என்று பாராட்டப்பட்டு வருகிறார்.
இந்த துலீப் டிராபியில் மட்டும் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், பேட்டிங்கிலும் ஒரு அரைசதம் உட்பட 111 ரன்களை விளாசியுள்ளார். 22 வயதாகும் மானவ் சுதார், 17 முதல்தர போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பெரிய ஸ்பெல்களை எளிதாக வீசக் கூடிய பவுலராக இருப்பதால், விரைவில் இந்திய அணிக்கு விளையாட வாய்ப்புகள் உள்ளது. கடைசியாக கேகேஆர் அணிக்காக ஆடி வரும் இளம் வீரரான ஹர்சித் ராணா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே இந்திய அணியில் இடம்பிடித்தாலும், முக்கியமான வேகப்பந்துவீச்சாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.