
வியாழக்கிழமை போட்டி துவக்கம்
சுனில் ஜோஷி தலைமையிலான புதிய தேர்வுக்குழு நேற்று முதல் முறையாக கூடியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை அது நேற்று அறிவித்தது. அதில் ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஷிகர் தவான் ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன. முதல் போட்டி மார்ச் 12ம் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.

முதலில் ஐபிஎல் ஆடட்டும்
இந்த நிலையில் புதிய தேர்வுக் குழு தோனி மீது பரிவு காட்டலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தோனி மீதான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தோனி முதலில் விளையாடட்டும். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம் என்று அவர் கூறியுள்ளார். வருகிற ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை வைத்துத்தான் அவருக்கு அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா என்பது தெரிய வரும்.

ஐபிஎல்லுக்கு தீவிர பயிற்சி
தோனி கடைசியாக கடந்த ஜூலை மாதம் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் ஆடியதுதான். அதன் பிறகு அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு அவர் தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த போட்டித் தொடருக்குப் பிறகுதான் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா இல்லையா என்பது தெரிய வரும்.

அணிக்கு மீண்டும் திரும்பலாம்
இதற்கிடையே, தோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ அதிகாரி கூறுகையில், தோனியின் எதிர்காலம் குறித்து எதுவும் அவருடன் பேசப்படவில்லை. அவர் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடினால் மீண்டும் அணிக்குத் திரும்பலாம். அவர் மட்டுமல்ல, யாரெல்லாம் சிறப்பாக ஆடுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் கூட நல்ல வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்திய அணியில் இடம் பெற வேண்டுமானால் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாட முயற்சிக்கட்டும் என்றார்.

தேர்வுக்குழு செயல்பாடு
வருகிற அக்டோபர் - நவம்பரில் டி 20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஐபிஎல் தொடரை முடித்த பிறகு இந்தியா கலந்து கொள்ளவுள்ள முக்கியத் தொடர் இதுவாகும். எனவே இதையும் மனதில் கொண்டே தேர்வுக் குழு செயல்படப் போகிறது. ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடுவோருக்கு உலக்க கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு அதிகம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

எதிர்காலம் சிறப்பாக இருக்கும்
தோனி ஐபிஎல்லில் சிறப்பாக ஆடினால் அவரது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கூட சுட்டிக் காட்டியுள்ளார். எனவே எல்லோரின் பார்வையும் தோனி மீதும் ஐபிஎல் மீதும்தான் படிந்துள்ளது. மறுபக்கம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் சோபிக்கத் தவறி விட்டார். இன்னொரு புறம், கே.எல். ராகுல் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக பரிமளிக்க ஆரம்பித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











