மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அணிக்குள் நிலவும் சர்ச்சைகள் குறித்த சமூக வலைத்தள வதந்திகளுக்கு விளக்கமளிக்கத் தேவையில்லை எனக் கூறியுள்ளார். தான் ஒரு மனிதன் என்பதால், மற்றவரைப் போல தவறிழைக்க தனக்கும் உரிமை உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் 2027 உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், அணி நிர்வாகம் மாற்றங்களை விரைவுபடுத்தி, ரோஹித்தை நீக்கி ஷுப்மன் கில்லை ஒருநாள் கேப்டனாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.

ரோஹித், கோலி மற்றும் கம்பீர் இடையே உரசல்கள் நிலவுவதாகவும், அணிக்குள் பிளவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைப் பயிற்சியாளரான கம்பீர், பொறுப்பேற்றது முதல், நியூசிலாந்துடனான சொந்த மண்ணில் தோற்றது உட்பட மூன்று ஒருநாள் தொடர்களை இழந்துள்ளார்.

இது குறித்து பேட்டி அளித்த கம்பீர், "நானும் ஒரு மனிதன், தவறுகள் செய்ய எனக்கு உரிமை உண்டு. கடந்த 18 மாதங்களில் நான் தவறிழைத்திருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் வரும் எதற்கும் நான் விளக்கமளிக்கத் தேவையில்லை," என்றார்.
கம்பீர், 2027 உலகக் கோப்பை இறுதிவரை, முந்தைய பயிற்சியாளர்களை விட நீண்ட, மூன்றரை ஆண்டு ஒப்பந்தத்தில் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். உலகக் கோப்பை முடிந்த ஆறு மாதங்களுக்குள், கிரிக்கெட் மீண்டும் இடம்பெறும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் புதிய திருப்பமாக அமையும்.

"ஒலிம்பிக்கில் பங்கேற்பது எனக்கு பெரிய கௌரவம். இந்தியா சார்பாக விளையாடும் வாய்ப்பு சிலருக்கே கிடைக்கும், கடினமான ஆட்டங்களுக்கு அதிக ஆக்ரோஷம் அவசியம் என்பதில் முதல் நாளிலிருந்தே நான் தெளிவாக இருந்தேன்," என்றும் கம்பீர் தெரிவித்தார். கம்பீர் பயிற்சியாளராக சந்த பிறகு தான் ரோகித், கோலி, அஸ்வின் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதாகவும், தற்போது ஒருநாள் போட்டியிலும் இருவரும் விலக வற்புறுத்தப்படுவதாக எழுந்த புகாருக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.