மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு மொத்தமாக ரூ.265 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் மூலமாக வரும் வருமானம் மட்டுமல்லாமல், ஜவுளித் துறை முதலீடுகள், உணவகங்கள், ரியல் எஸ்டேட் மூலமாக கம்பீர் ஈட்டி வரும் வருமானம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்கள், பணம் ஒருநாளும் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போவதில்லை என்று கூறுவார்கள். ஆனால் கம்பீரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எண்ணினால் சாமானிய மக்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். ஏனென்றால் இந்திய அணிக்காக விளையாடிய கம்பீரின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களின் மதிப்பாக ரூ.265 கோடி கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீர், ஆண்டுக்கு ரூ.12 கோடி ஊதியமாக பெறுகிறார். அதுமட்டுமல்லாமல் தினசரி கம்பீருக்கு அலவன்ஸாக ரூ.21 ஆயிரம் அளிக்கப்படுகிறது. கிரிக்கெட்டராக ஆடிய காலத்திலேயே பல்வேறு முன்னணி நிறுவனங்களின் விளம்பர தூதராக இருந்தவர்.
அதேபோல் கிரிக்கெட்டில் எப்படி கொடிகட்டி பறந்தாரோ, அதே அளவிற்கு ரியல் எஸ்டேட் துறையிலும் உச்சத்தில் இருந்தவர். டெல்லியின் ராஜிந்தர் நகரில் உள்ள கம்பீரின் வீட்டு மதிப்பு மட்டும் ரூ.15 கோடியாகும். அதேபோல் நொய்டாவில் ரூ.4 கோடி மதிப்பில் ஒரு வீடும், மலக்பூரில் ரூ.1 கோடிக்கு ஒரு வீடும் வைத்துள்ளார். அதேபோல் ஜவுளித் துறை மற்றும் உணவகங்களில் கம்பீரின் முதலீடுகள் அதிகளவில் இருக்கின்றன.
தோனிக்கு பின் சிறந்த கார்கள் கம்பீர் வசம் இருக்கிறது என்பதை அடித்து சொல்லலாம். அதில் விலை உயர்ந்த கார்கள் என்று மாருதி சுசூகி, டொயோட்டா கொரல்லா, மஹிந்திரா பொலேரோ, அவ்டி க்யூ5, பிஎம்டபிள்யூ 530டி என்று 5 மாடல் கார்கள் கம்பீரின் வீட்டில் எப்போதும் நிற்கும். இன்னும் சில கார்கள் கம்பீர் கராஜில் நிற்கிறது. கிரிக்கெட்டராக இருந்த காலத்தில் கம்பீரிடம் 10க்கும் அதிகமான கார்கள் இருந்தன.
கம்பீரின் தந்தை தீபக் கம்பீர் ஜவுளித்துறை முதலீடுகளை கவனித்து வருகிறார். பிறக்கும் போதே கம்பீர் பணக்காரராக இருந்தவர். அதனால் அவரின் பெயரில் உள்ள சொத்துக்களின் கணக்கு மட்டும் ரூ.265 கோடியாக உள்ளது. இன்னும் கம்பீரின் மனைவி மற்றும் கம்பீர் குடும்ப சொத்துக்களை சேர்த்தால், இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.