
டெல்லி: டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய கவுதம் கம்பீர், இந்த சீசனில் பணம் வாங்காமல் டெல்லி அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த கவுதம் கம்பீர், டெல்லி அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

இந்த சீசனில் டெல்லி அணி, இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கவுதம் கம்பீர் இன்று அறிவித்தார். அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரூ.2.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கம்பீர், சம்பளம் எதுவும் வாங்காமல் இந்த சீசனில் விளையாடுவதற்கு முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். பணத்தை விட, கவுரவத்துக்கு கம்பீர் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார். அதனால் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு கிரிக்கெட்டில் தன்னுடைய அடுத்தக்கட்ட திட்டம் குறித்தும் அவர் முடிவு செய்ய உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.