டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கவுதம் கம்பீர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் விளையாடவில்லை.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த கவுதம் கம்பீர், டெல்லி அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கவுதம் கம்பீர், இந்த சீசனில் சரியாக செயல்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
அதையடுத்து, தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகினார்.
அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். புதிய கேப்டன் தலைமையிலான டெல்லி அணி, கொல்கத்தா அணியுடன் விளையாடியது.
அந்த ஆட்டத்தில் கவுதம் கம்பீர் இடம்பெறவில்லை. அதே நேரத்தில் அந்த ஆட்டத்தில் டெல்லி அபார வெற்றி பெற்றது.
போட்டியில் விளையாடுவதில்லை என்று கம்பீர் தானாகவே முடிவு எடுத்தார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், புனேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி இன்று விளையாடுகிறது.
இதில் டாஸை வென்ற டெல்லி பவுலிங் செய்கிறது. இன்றைய ஆட்டத்தில் விளையாடும் டெல்லி அணியிலும் கம்பீர் இடம்பெறவில்லை. அவர் இந்த சீசனில் அடுத்த ஆட்டங்களில் விளையாடுவாரா அல்லது கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.