
டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் இடம்பெறவில்லை.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த கவுதம் கம்பீர், டெல்லி அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் டெல்லி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கவுதம் கம்பீர், இந்த சீசனில் சரியாக செயல்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அதையடுத்து, தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார்.
அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். புதிய கேப்டன் தலைமையிலான டெல்லி அணி, கொல்கத்தா அணியுடன் டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் டாஸை வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி பேட்டிங் செய்கிறது. ஆனால், ஆட்டத்தில் விளையாடும் டெல்லி அணியில், கவுதம் கம்பீர் இடம்பெறவில்லை.
முன்னதாக, நான் சரியாக விளையாடவில்லை என்றால், என்னை அணியில் இருந்து நீக்கி கொள்ளலாம் என்று கம்பீர் கூறியிருந்தார். இந்த நிலையில், அவர் இன்றைய போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை. அடுத்து வரும் ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா, அல்லது அணியில் இருந்து அவர் விலகுகிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.