
டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாகிறார்
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த கவுதம் கம்பீர், டெல்லி அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

இந்த சீசனில் டெல்லி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கவுதம் கம்பீரின் கேப்டன்சி இந்த முறை எடுபடவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
நாளை மறுநாள் கொல்கத்தா அணியுடன் டெல்லி அணி விளையாட உள்ளது. இந்த நிலையில் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கவுதம் கம்பீர் இன்று அறிவித்தார். அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.