ஜோகன்ஸ்பெர்க்: இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையே காந்தி-மண்டேலா பெயரிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்து இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹாரூன் லோர்கட் கூறியதாவது:

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே காந்தி- மண்டேலா பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில் இந்தியா ஆர்வமாக இருந்து வருகிறது. இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி விளையாட உள்ளது.
2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியும் விளையாட இருக்கிறது. காந்தி-மண்டேலா பெயரில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது தொடர்பாக இருநாட்டு வாரியங்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியானது கடந்த 18 மாதங்களாக டி20 போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தது. தற்போது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை டி20 போட்டிகளில் பங்கேற்பதற்கு தயாராகி வருகிறோம்.
இவ்வாறு லோர்கட் கூறினார்.