ஐபிஎல் ஜோதியில் கலந்தார் கங்குலி-புனேவுக்காக ஆடுவார்
டெல்லி: ஐபிஎல்லின் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாமல் திராட்டில் விடப்பட்ட முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளார். புனே வாரியர்ஸ் அணியில் இணைந்து அவர் ஆடவுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பு நடந்த வீரர்கள் ஏலத்தின்போது கங்குலியை யாருமே ஏலம் எடுக்கவில்லை. அவர் கேப்டனாக இருந்து வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கூட கங்குலியைக் கைவிட்டு விட்டது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஐபிஎல்லில் ஆடும் வாய்ப்பு கங்குலிக்குக் கிடைத்துள்ளது.
புனே வாரியர்ஸ் அணியில் கங்குலி இணைந்துள்ளார். அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஆசிஷ் நெஹ்ராவுக்குப் பதிலாக கங்குலி இணைந்துள்ளார். நெஹ்ரா காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் அவர் நீக்கப்பட்டு கங்குலி சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் புனே வாரியர்ஸ் அணியில் இடம் பெறுகிறார் கங்குலி. புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் யுவராஜ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கங்குலி செயல்பட்டபோது பலமுறை யுவராஜ் சிங்கை ஓரம் கட்டி வைத்திருந்தார் என்ற சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம். இந்த நிலையில் யுவராஜ் சிங் தலைமையில் கங்குலி ஆடவுள்ளார்.
புனே வாரியர்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டுள்ளது. இத்தொடரில் தொடர்ந்து 6 தோல்விகளை அது தழுவியுள்ளது. இந்த நிலையில் கங்குலியின் வருகையால் அணிக்கு ஏதாவது பலன் ஏற்படலாம் என நம்பப்படுகிறது.
மே 19 ம் தேதி கொல்கத்தா அணியை புனே எதிர்கொள்கிறது. அப்போது கங்குலி பட்டாசாகப் பொறிந்து கொல்கத்தா அணியை வீழ்த்த உதவுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications