கங்குலி முடிவு
இந்த நிலையில், அந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் கூடுதலாக ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்க வாய்ப்பு இருந்தும், கங்குலி அவர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்திய அணி தேர்வுக் குழு
இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக இருக்கும் எம்எஸ்கே பிரசாத் மற்றும் காகன் கோடா கடந்த 2015 முதல் பதவியில் உள்ளனர். மற்ற மூவரும் 2016 முதல் தேர்வுக் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
குறைந்த அனுபவம்
இவர்கள் ஐவருமே மிக மிகக் குறைந்த அளவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடி உள்ளனர். இவர்கள் எப்படி சர்வதேச கிரிக்கெட்டுக்கு தகுதியான வீரர்கள் தேர்வு செய்ய முடியும் என பலரும் நீண்ட காலமாக விமர்சித்து வருகின்றனர்.
சர்ச்சைகள்
டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த கருண் நாயருக்கு நீண்ட காலத்திற்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு தராதது, அவரை தேர்வுக் குழுவில் தேர்வு செய்த பின்னர் கேப்டன் கோலி அவருக்கு வாய்ப்பு தராதது பெரிய சர்ச்சை ஆனது.
தவித்த வீரர்கள்
அதே போல, அடுத்த தொடரில் தங்களுக்கு அணியில் இடம் கிடைக்குமா? இல்லையா? என தவித்து ஊடகங்களிடமும், இணையத்திலும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய வீரர்கள் வரிசை அதிகம். அதற்கு காரணமும் இந்த தேர்வுக் குழு தான்.
முன்னாள் வீரர்கள் விமர்சனம்
கவாஸ்கர், திலிப் வெங்க்சர்க்கார், பரூக் இஞ்சினியர் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் இந்த தேர்வுக் குழுவை மிக தீவிரமாக விமர்சித்து உள்ளனர். கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொல்படி அணியை தேர்வு செய்கிறார்கள் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
பதவிக் காலம்
பிசிசிஐயின் பழைய சாசனத்தின்படி இவர்களின் பதவிக் காலம் 4 ஆண்டுகள். புதிய சாசனத்தின்படி இவர்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். அதனால், அனைவர்க்கும் கூடுதலாக ஒரு ஆண்டு பதவிக் காலம் கிடைக்கும் என கூறப்பட்டது.
கங்குலி திட்டம்
முடிந்தவரை விரைவாக அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, அதிக அனுபவம் கொண்டவர் முன்னாள் இந்திய வீரர்களை இந்திய அணி தேர்வுக் குழுவில் நியமிக்க முயற்சித்து வரும் கங்குலி, தேர்வுக் குழு விஷயத்தில் பழைய சாசனத்தை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இனியும் நீடிக்க முடியாது
அதன் முதல் கட்டமாக நான்கு ஆண்டுகளாக தேர்வுக் குழுவில் இருக்கும் அதன் தலைவர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் உறுப்பினர் காகன் கோடா ஆகிய இருவரின் பதவிக் காலம் முடிந்துவிட்டதை அடுத்து, அவர்கள் பதவிக் காலத்திற்கு பின்னும் நீடிக்க முடியாது என பிசிசிஐ கூட்டத்திற்குப் பின் கூறினார் கங்குலி.
என்ன சொன்னார்?
கங்குலி, "பதவிக் காலம் முடிந்தது. அதன் பின்னும் தொடர முடியாது. அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்" என்று கூறி அவர்களுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என்பதை அறிவித்தார் கங்குலி.