மும்பை : இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.
இந்தாண்டு இதற்கு முன் தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. எனினும், ரவி சாஸ்திரி - கோலி அதை சமாளித்து விட்டார்கள். இப்போது இங்கிலாந்தில் கோலி தவிர எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக செயல்படவில்லை.
இதையடுத்து, கோலியின் தலைமை மீதும், ரவி சாஸ்திரியின் பயிற்சி முறைகள் மீதும் கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், பேட்டிங் பயிற்சியாளர் என்ற பதவியில் இருக்கும் சஞ்சய் பங்கர் மீதும் விமர்சனங்கள் எழுகின்றன. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய அணியின் செயல்பாடுகள் பற்றி தன் கருத்துக்களை கூறி இருக்கிறார்.
இது பற்றி கங்குலி கூறுகையில், "இந்திய பேட்டிங் நீண்ட காலமாகவே சரியில்லை. 2011இல் இருந்து இந்தியாவின் வெளிநாட்டு தொடர்களைப் பார்த்தால், அனைத்து பெரிய தொடரையும் இந்தியா இழந்துள்ளது. மற்ற பேட்ஸ்மேன்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விராட் கோலி பேட்டிங் செய்யும் போது வேறு பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆடுவது போல உள்ளது" என்றார்.
மேலும் இந்திய பேட்ஸ்மேன்கள் பற்றி பேசினார். "தற்போதுள்ள வீரர்களின் பேட்டிங் திறன் மிகவும் கீழே இறங்கி விட்டது. அதற்கு பல காரணங்கள் உள்ளது. முதலில் வீரர்களுக்கு நம்பிக்கை இல்லை. புஜாரா அல்லது ரகானேவை எடுத்துக் கொள்வோம். ரகானே நான்கு வருடங்கள் முன்பு அடிலெய்ட் டெஸ்டில் கோலிக்கு இணையாக ஒவ்வொரு ஷாட்டும் ஆடினார். புஜாராவும் அதே போல தான் அப்போது இருந்தார்" என்றார்.
"ரவி சாஸ்திரி மற்றும் சஞ்சய் பங்கர் இருவரும் "ஏன் ஒரே ஒரு பேட்ஸ்மேன் மட்டும் நன்றாக ஆடுகிறார், மற்றவர்கள் பின்வாங்குகிறார்கள்?" என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல், முக்கியமான மூன்று நாடுகளில் இந்தியா டெஸ்ட் தொடரில் வெல்ல முடியாது" என தன் நியாயமான விமர்சனத்தை முன்வைத்தார் கங்குலி.
மேலும் கங்குலி கூறுகையில், "மற்ற பேட்ஸ்மேன்கள் கோலி ஆடுவார் என இருக்காமல் தாமாக முன்வந்து விளையாட வேண்டும். வெறும் 20 விக்கெட்கள் எடுத்தால் மட்டும் போட்டியை வென்றுவிட முடியாது. ரன்னும் அடிக்க வேண்டும்" என முடித்தார்.