ரவி சாஸ்திரியின் சீண்டல்
இங்கிலாந்து தொடரை இழந்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ன சொல்லப் போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில், "கடந்த 15-20 ஆண்டுகளில் இப்போதுள்ள அணிதான் சிறந்த அணி" என கூறினார். ரவி சாஸ்திரி கூறும் காலத்தில் கேப்டனாக இருந்தவர்கள் கங்குலி, டிராவிட், கும்ப்ளே மற்றும் தோனி. இதில் கங்குலிக்கும் சாஸ்திரிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. அதனால், கங்குலியை தான் அவர் சீண்டுகிறார் என கருதப்பட்டது.
கோலி சொன்னது என்ன
கங்குலி இது பற்றி பேசுகையில், தோல்வி பற்றி கோலியின் வார்த்தைகளை சுட்டிக் காட்டினார். கோலி இங்கிலாந்து தொடர் தோல்வி பற்றி பேசுகையில் முதல் மற்றும் நான்காம் போட்டியில் தான் கொஞ்சம் நின்று ஆடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறினார். தோல்விக்கான காரணத்தை தன் அளவில் சுருக்கிக் கொண்டார். மற்றவர்கள் மேல் சுமத்தவில்லை என கூறினார் கங்குலி.
பேச்சை மதிக்க வேண்டாம்
"தோல்வி பற்றி ரவி சாஸ்திரி சொல்வதற்கும், கேப்டன் கோலி சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என நான் சொல்ல விரும்புகிறேன்" என கூறினார் கங்குலி. மேலும், "ரவி சாஸ்திரி சொல்வது முதிர்ச்சியற்ற கருத்துக்கள். அதையெல்லாம் நீங்கள் கவனிக்க வேண்டாம். அவர் என்ன சொல்கிறார், எப்போது சொல்கிறார் என்பதெல்லாம் யாருக்கும் புரியாது" என்றார்.
எல்லோருமே இந்திய அணி தான்
சாஸ்திரி "இப்போதுள்ள இந்திய அணி தான் சிறந்தது" என கூறியதை குறிப்பிட்டு பேசிய கங்குலி, "சேத்தன் சர்மாவோ, நானோ, தோனியோ, கோலியோ யார் ஆடினாலும், நாங்கள் இந்திய அணிக்கு தான் ஆடினோம். நங்கள் எல்லோரும் இந்திய அணிதான்" என முடித்தார்.