ஆதரவு அளித்த கங்குலி
இந்த நிலையில், முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மிதாலி ராஜுக்கு ஆதரவான கருத்தை கூறியுள்ளார். "மிதாலி ராஜ் மட்டுமல்ல. நானும் தான் அப்படி வெளியே உட்கார வைக்கப்பட்டேன். மிதாலி ராஜ் வெளியே அமர வைக்கப்பட்ட போது நான், "இந்த குழுவுக்கு உங்களை வரவேற்கிறேன்" என கூறினேன்" என்று தன் ஆதங்கத்தை கொட்டினார் கங்குலி.
கங்குலிக்கு நேர்ந்தது என்ன?
கிரேக் சாப்பல் பயிற்சியாளராக வந்த போது சில மாதங்கள் கழித்து கங்குலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கங்குலி நன்றாக ஆடினாலும், 15 மாதங்கள் வரை ஒருநாள் அணியில் இடம் பெற முடியவில்லை. அதை நினைவு கூர்ந்த கங்குலி, அதே போன்ற சூழ்நிலை தான் இப்போது மிதாலி ராஜுக்கு ஏற்பட்டுள்ளது என கூறினார்.
மனக்கசப்பு தான் காரணமா?
மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை மிதாலி ராஜ் ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருக்கிறார். ஹர்மன்ப்ரீத் கௌர் டி20 அணிக்கு கேப்டனாக இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக மனக்கசப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.
பிசிசிஐ விசாரணை செய்யவுள்ளது
இதன் காரணமாகவே முதல் மூன்று குரூப் போட்டிகளில் நன்றாக ஆடிய மிதாலி ராஜை முக்கியமான அரையிறுதிப் போட்டியில் ஹர்மன்ப்ரீத் சேர்க்கவில்லை என சர்ச்சை வெடித்துள்ளது. இது ரசிகர்கள் இணையத்தில் கேள்விகளால் துளைத்ததோடு முடியாமல் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. மிதாலி ராஜின் மேனேஜர் எனக் கூறப்படும் ஒருவர் ஹர்மன்ப்ரீத்தை திட்டி ட்வீட்கள் போட்டதால் விஷயம் பிசிசிஐ விசாரணை வரை சென்றுள்ளது.