மும்பை: பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து பாதியிலேயே விலகியது குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் முதல்முறையாக மனம் திறந்துள்ளார். மோஷின் நக்வி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அளவுக்கதிகமான தலையீடே தனது ராஜினாமாவுக்கு முக்கிய காரணம் என அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
2024 ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார். பிசிபி நிர்வாகத்துடன் 2 ஆண்டு கால ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்ட போதிலும், வெறும் 6 மாதங்களில் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு அவர் இந்த அதிரடி முடிவை எடுத்தார். அவருக்குப் பதிலாக டெஸ்ட் அணி பயிற்சியாளரான ஜேசன் கில்லெஸ்பி ஆஸ்திரேலிய தொடருக்குத் தற்காலிகமாகப் பொறுப்பேற்றார். ஆனால், அவரும் சில மாதங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்து வெளியேறியது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விளையாட்டு ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த கேரி கிர்ஸ்டன் தனது ராஜினாமாவுக்கான உண்மையான காரணங்களை விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், "பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் பிசிபி நிர்வாகத்தின் தலையீடு தான். எந்தவொரு அணியிலும் இதுபோன்ற ஒரு அத்துமீறலை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை. அணியின் உள்விவகாரங்களில் வெளியே இருந்து வரும் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியில், வீரர்களுடன் இணைந்து செயல்படுவது ஒரு பயிற்சியாளருக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "அணி மோசமாகச் செயல்படும்போது, அதற்கான தண்டனையாக பயிற்சியாளரை நீக்குவது அல்லது அவருக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது தான் மிக எளிதான முடிவாக இருக்கிறது. ஒரு பயிற்சியாளராக அணியின் தோல்விக்கு நீங்கள் தான் எளிதில் பலிகடா ஆக்கப்படுவீர்கள். அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பயிற்சியாளரை மட்டும் குறிவைப்பது எந்த வகையிலும் அணிக்குப் பயனளிக்காது" எனவும் அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். கேரி கிர்ஸ்டனின் இந்தக் குற்றச்சாட்டுகள் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
