கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கேரி கிர்ஸ்டன், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகத் தான் பணியாற்றிய குறுகிய கால அனுபவங்கள் குறித்தும், அந்த அணி நிர்வாகத்தின் தலையீடுகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறத் தவறியதால் பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்தது தமக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என்றும், ஆனால் அது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகப்படியான தலையீடு காரணமாகவே, வெறும் 5 மாதங்களில் கேரி கிர்ஸ்டன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர், "பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு நான் பெரிய அளவில் அதிர்ச்சியடையவில்லை. ஆனால் அது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது."

"அந்த வீரர்கள் அணிக்காகத் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் அனைவருடனும் எனக்கு நல்ல உணர்வுபூர்வமான பிணைப்பு உள்ளது. சமீபத்தில் கொழும்பில் அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் அனைவரும் தங்கள் நாட்டுக்காகச் சிறப்பாகச் செயல்படத் துடிக்கும் அர்ப்பணிப்புள்ள வீரர்கள்" என்று கூறினார்.
"இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா, இலங்கை என எந்த நாட்டு வீரர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள். நாங்கள் அனைவரும் கிரிக்கெட் என்ற ஒரே மொழியில் தான் பேசுகிறோம். நான் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதையே எப்போதும் விரும்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நிர்வாகத்தின் அத்துமீறல் குறித்துப் பேசிய அவர், "பாகிஸ்தான் அணியுடன் எனது பயணம் வெறும் 5 மாதங்கள் மற்றும் 6 டி20 போட்டிகளுடன் முடிந்துவிட்டது. இது எனது 4 ஆவது சர்வதேச பயிற்சியாளர் பணியாகும். ஒவ்வொரு நாட்டிலும் நிர்வாகத்தின் தலையீடு வெவ்வேறு விதமாக இருக்கும். ஆனால், அங்கு அது மிகவும் அச்சுறுத்தும் வகையிலும், எல்லை மீறியும் இருந்தது. ஒரு பயிற்சியாளராக அணிக்குள் எனக்கு எந்தவித செல்வாக்கும் இல்லை அல்லது எனது முடிவுகளுக்கு மதிப்பில்லை என்ற நிலை வரும்போது, அந்தப் பதவியில் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

"எனக்கு இப்போது 58 வயதாகிறது. எனது 20 ஆவது வயது முதல் கடந்த 38 ஆண்டுகளாகக் கிரிக்கெட் பயணத்தில் உள்ளேன். நான் செல்லும் இடங்களில் எனது அனுபவத்தின் மூலம் அணிக்கு மதிப்பைச் சேர்க்கவே விரும்புகிறேன். அது முடியாதபோது அந்தப் பணியைச் செய்வதில் எந்தப் பயனும் இல்லை" என்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியதன் உண்மையான காரணத்தை அவர் குறிப்பிட்டார்.
