இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் பதவி விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவர் பாகிஸ்தான் அணியிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் உள்கட்டமைப்பிலும் மாற்றங்களை செய்ய விரும்பினார்.
ஆனால், கேரி கிர்ஸ்டன் எடுத்த முடிவுகள் பலவற்றுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. 2011 ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று தந்த வெற்றிகரமான பயிற்சியாளர் என்ற அடிப்படையில் தான் கேரி கிர்ஸ்டன் பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

பாகிஸ்தான் அணியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பல்வேறு குழப்பங்கள் மற்றும் விரிசல்கள் இருந்து வரும் நிலையில் அதில் கேரி கிர்ஸ்டனும் சிக்கினார். பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என கேரி கிர்ஸ்டன் கூறிய போதும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி இருந்தது. அதன் பின் பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன. ஆனால், இதில் கேரி கிர்ஸ்டன் பங்கு பெரிதாக இல்லை. அவர் சொன்ன முடிவுகள் பலவற்றை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை.
குறிப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உயர் செயல்திறன் பயிற்சியாளராக அனுபவம் வாய்ந்த டேவிட் ரெய்டு என்பவரை நியமிக்க வேண்டும் என கேரி கிர்ஸ்டன் கேட்டு இருந்தார். ஆனால், அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக முன்னாள் பாகிஸ்தான் வீரர்களை அந்த பதவியில் நியமிக்கலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு யோசனை கூறி இருந்தது.
அதற்கு கேரி கிர்ஸ்டனுக்கு விருப்பமில்லை. பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அணித் தேர்விலும் கேரி கிர்ஸ்டன் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது. அவர் பதவி விலகும் முடிவில் இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல மாட்டார் எனவும் தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.